பக்கங்கள்

சனி, பிப்ரவரி 06, 2021

பௌத்தம்- சிங்களம்-இலங்கை- சுதந்திர தினம்! 4.2.1948!

ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திரதினம் ( 4.07.1776) என்பது வெள்ளை இன அமெரிக்கர்கள் கொண்டாடுவதே என்று சொல்வார் அன்றைய அடிமைமுறை ஒழிப்புப் போராளியும் எழுத்தாளருமான ஃபிரடெரிக் டக்ளஸ் (1818-1895) அவர்கள்.

ஃபிரடெரிக் டக்ளஸ் அவர்கள் அடிமையாகவே பிறந்த அமெரிக்கர். 1852 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய நீண்ட சொற்பொழிவொன்றின் சுருக்கிய வடிவம் கீழே தரப்படுகின்றது. இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து அதன் அரசியல் வரலாற்றின் எதிர்முனை வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தமுடியாத தோல்வி மற்றும் சிங்கள பௌத்த,பேரினவாத உச்சக் கட்ட வளர்ச்சியின் ” ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி” என்ற அந் நாட்டின் அதியுயர் அதிகாரப் பதவித் தலைவரின் சுதந்திரதின உரையினைக் கேட்கும்போது அன்று ஃபிரடெரிக் டக்ளஸ் அவர்கள் பேசியதைத்தான் ஓரங்கட்டப்படும் வேற்றினப் பிரஜை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஃபிரடெரிக் டக்ளஸ்(FREDERICK DOUGLASS):
" இந்த நாட்டின் சக பிரஜைகளே, நானோ அல்லது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் என் சமூகமோ நீங்கள் மகிழ்ந்து கொண்டாடும் இந்தத் தேசியச் சுதந்திரத்துடன் எவ்வகையிலும் சம்பந்தமுடையவர்களாக இருக்கின்றோமா? நீங்கள் உன்னதம் என்று களிக்கும் இந்தச் சுதந்திரம் உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான நீண்டு செல்லும் விரிசலையே புலப்படுத்துகின்றது.
முதுசொமென உங்களது தந்தையர்களால் உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள சட்டம், நீதி, விடுதலை, செழிப்பு மற்றும் சுதந்திரம் உங்களுக்குள்லேயே பங்குகொள்ளப்படுகின்றன. என்னோடு அல்லவே! உங்களுக்கு ஜீவித்தையும் சேமநலத்தினையும் நல்கும் சூரிய ஒளியோ (சவுக்கடியின்) கோட்டுரணங்களையும் சாவினையுமல்லவா எனக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. இந்த ஜூலை நான்காம் தேதி உங்களுடையதே அல்லாமல் என்னுடையது அல்ல. நீங்கள் மகிழ்ந்து களியுங்கள், நான் துக்கப்பட வேண்டும்.

விலங்கிடப்பட்ட மனிதனொருவனை ஒளிர்ந்து மின்னும் விடுதலை என்னும் ஆலயத்திற்குள்ளே வலிந்திழுத்துச் செல்வதும் ஆனந்த கீதம் இசைக்க வைப்பதும் மனித்துவமற்ற கேலிக்கூத்து. புனித்தின் முரண்நகை. எங்களுக்கான [ கறுப்பு அமெரிக்கர்களுக்கு] ஜூலை நான்கு எதுவென என்னிடம் கேட்டால், இப்படித்தான் நான் பதிலிறுப்பேன்: ஆண்டின் மற்றெல்லா நாட்களையும் விட எந்த நாள் அவனை விடுலைதலை செய்கிறதோ , அளவற்ற அநீதிக்கும், நித்திய குரூரத்திற்கும் பலியாவதில் இருந்து எந்தநாள் அவனை விடுலைதலை செய்கிறதோ அந்த நாளே அது! அதுவரை உங்கள் கொண்டாட்டம் அவனுக்கு ஒரு ஏமாற்று மோசடி. […] காட்டுமிராண்டிகளின் இழிந்த தேசம் தம் குற்றங்களை மறைக்கப் போடும் ஒரு கந்தல் மூடுதிரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக