அதனுள்ளே இதழாசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் கே. கணேஷ் அவர்களைப் பேட்டி கண்டும், அவரது இலக்கிய வரலாறு, இலக்கிய முயற்சிகள் போன்றவற்றை சிரத்தையுடன் ஆவணப்படுத்தியுமுள்ளார். அது காலத்தால் ஆற்றிய அருஞ்செயல். ஞானம் கலை இலக்கிய சஞ்சிகைக்கும் அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்களுக்கும் நன்றி!
1958இல் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த தினத்தையொட்டி அகில உலகரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மேகங்கள் என்ற கவிதையை எழுதி வெற்றிபெற்று ஜப்பானிய சக்கரவர்த்தி ஹீரோஹிட்டோவின் அரசவைக் கவிஞர்கள் பாராட்டு விருதைப் பெற்றவர்.
இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச் சபை சாகித்திய மண்டல உறுப்பினராக 1975 முதல் 1977 வரை பணியாற்றியவர். றோயல் ஏஸியாற்றிக் சொசைட்டியின் ஆயுட்கால உறுப்பினர்.
பென் - PEN ஸ்தாபனத்தின் உறுப்பினர். இது கவிஞர்கள் நாடக ஆசிரியர்கள், பத்திரிகையாசிரியர்கள், நாவலாசிரியர்களைக் கொண்ட சர்வதேச ஸ்தாபனமாகும்.
உக்ரேனிலும் பல்கேரியாவிலும் நடைபெற்ற உலக மொழிபெயர்ப்பாளர் மாநாடுகளில் 1984இலும் பின்னரும் இரு தடவைகள் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர்.
இந்து சமய கலாசார அமைச்சின் இலக்கியச் செம்மல் விருது,இலங்கை அரசின் கலாபூஷணம் விருது பெற்றவர்.
உலக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்து 22 மொழி பெயர்ப்புநூல்களை வெளிக்கொணர்ந்தவர்.
கே.கணேஷ்: எனது பெற்றோரும், முதாதையர்களும் தமிழகத்தின் திருச்சிமாவட்டத்தை சேர்ந்த தத்தமங்கலம் என்ற சிற்றூரில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். எனது தந்தையார் வழி வைணவர்களாக ஸ்ரீரங்கம் அரங்கநாதனையும், திருப்பதி வெங்கடாசலபதியையும் குலதெய்வமாக அமைந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். 'தாது வருஷப்பஞ்சத்தில்' அடிபட்டு மன்னார் - மாத்தளை வழிவந்து குடியேறியவர்கள்.
முன் தலைமுறையினர் கோப்பித் தோட்டங்களில் பணிபுரிந்து படிப்படியாய் செல்வம் அடைந்து வாழ்ந்தவர்கள். உழைப்பையே ஊதியமாகக் கொண்டவர்கள். அதிலே நாட்டமுடையவர்களாக இருந்ததால் கல்வியில் நாட்டமில்லாத சமூகத்தினராக இருந்தனர்.தாய் வழித் தாத்தா மலைநாட்டில் கங்காணியாக இருந்தவர். அவர்தொழில் புரிந்த தோட்டத்துரையான வெள்ளையரின் நன்மதிப்பைப் பெற்றதால், துரை அவரை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த Justice Schneider என்ற பறங்கியருக்கு அறிமுகஞ் செய்து வைத்தார்.
அவர் களுத்துறை அருகேயுள்ள தனது Fullerton estate என்ற தென்னந்தோட்டத்தில் தாத்தாவைக் கங்காணியாக நியமித்தார். அத்தோடு அக்காலத்தில் அரசு நிறுவனமான பொதுப்பாதை அமைப்புகளின் பொறியிலளாராக இருந்த வெள்ளையர்களிடம் சிபார்சு செய்து பாதையமைக்கும் தொழிலாளர்களை கண்காணிக்கும் பணியாளராக நியமனம் பெற உதவி செய்தார். அக்காலத்தில் P.W.D.Overseers என்போர் ரைட்டர்கள் என அழைக்கப்பட்டனர்.
அத்துறையில் ஆங்கிலங்கற்ற ஈழத்தமிழர்களே செயல்புரிந்தனர். இதில் எனது தாத்தா ஒருவரே இதுவரை பணிபுரிந்த ஒரே இந்தியர் .தவிரவும் 1926களில் இவர் பேருவளை ரைட்டர்' பதவி வகித்த காலத்தில், அவரது மகன் (எனது தாய்மாமன்) கொழும்புக்கும் களுத்துறைக்கு மிடையேபயணப்பேருந்து சேவை நடத்தியவர். கண்டி தலாத்துஓய பேருந்து சேவையை முதலில் நடத்தியவரும் அவரே. அம்பிட்டியாவில் தென்னந்தோட்டமாகிய தலப்பின்னா உரிமையாளராகவும் எனது தாத்தா விளங்கினார். 'எங்கள் தாத்தாவுக்கு கொம்பன் யானை இருந்தது' என்ற கதையாக அமைந்தது இது. அக்கால உயர்நிலை பிற்காலத்தே சரிந்து போனது வேறுகதை.
கே.கணேஷ்: பாட்டனார் பெயரையே பேரனுக்கும் சூட்டும் மரபுடையவர்களாதலால் எனது பெயர் 'நாராயணன்' என்றுதான் அமைந்திருக்க வேண்டும். எனது பெற்றோருக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் பிள்ளைப் பாக்கியத்திற்கு ஏங்கிய நிலையில் திருச்சி தத்தமங்கலம் கிராமத்தில் ஆற்றங்கரையருகே பிள்ளையார் சிலை அமைத்து, அரசும் வேம்பும் வளர்த்து, சுற்றி வழிபட்டு எனது அன்னை வேளூரம்மாள் விநாயகரது கிருபையால் என்னைப் பெற்றெடுத்தார் என்பர். தலைப்பிள்ளையின் பிரசவம் தாய்வழித் தாத்தா அகத்திலே நடைபெறும் மரபுவழியில், கண்டி - அம்பிட்டியில் தென்னந்தோட்ட உரிமையுற்றிருந்த 'தலைப்பின்னாவ' தோட்டத்தில் நான் பிறந்தேன். விநாயகர் கிருயைால் நான் பிறந்ததினால் எனது பெற்றோர் எனக்குச் சித்திவிநாயகம் எனப்பெயரிட்டனர்.
எனது தாய்மாமன் முத்துசாமிப்பிள்ளை, அம்மா ஆகியோர் என்னை 'கணேசன்' எனச் செல்லமாக அழைக்கத் தொடங்கவே அதுவே நிலைபெற்றுவிட்டது.
கே.கணேஷ்:1932இல் மாணவனாக இருந்தபோது டாக்டர் வரதராஜநாயுடு அவர்களது ‘தமிழ்நாடு' வார சஞ்சிகையில் எழுதினேன். ஆனந்தபோதினியிலும் எழுதியுள்ளேன். மணிக்கொடி, மாதர் மறுமணம், ஜனசக்தி, லோகசக்தி, கல்கி, வேறும் சில. ஞாபகம் இல்லை.
கே.கணேஷ்:மணிக்கொடியில் எனது 'ஆசாபாசம்' என்ற சிறுகதையும், எனது முதல் மொழிபெயர்ப்பு முயற்சியான அதிஷ்டசாலி' என்ற ஹங்கேரியச் சிறுகதையும் வெளிவந்தன. தற்போது கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மணிக்கொடித் தொகுப்பில் அதிஷ்டசாலி இணைக்கப்பட்டுள்ளது. தத்தமங்கலம் க.கணேசன் என்ற பெயரிலேயே அது வெளிவந்துள்ளது.
கே.கணேஷ்:காரைக்குடி காங்கிரஸ் காரரும் இலக்கிய ஆர்வலருமான தனவணிகர் சொ.முருகப்பா அவர்கள் சீர்திருத்த நோக்குடன் ஒரு விதவையை மணந்தார். அவர் பெயர் மரகதவல்லி. சொ.மரகதவல்லி முருகப்பா நடத்தியமாத இதழ்தான் 'மாதர் மறுமணம்' இது ஒரு சீர்திருத்த நோக்கம் கொண்ட பத்திரிகை. வீரகேசரி ஆசிரியராக இருந்த கே.வி.எஸ்.வாஸ் (பி.ஏ.ஹானஸ்) அவர்களும் அதில் அப்போது எழுதிக்கொண்டிருந்தார்.
கே.கணேஷ்:ஆர்.கே.நாராயணன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவர் தனது பெயரை ஆர்.கே.நாராயன் என்று சுருக்கிக் கொண்டார். அது தந்த இன்ஸ்பிரேசனில் நானும் கே.கணேஷ் என்று எனது பெயரைச் சுருக்கி, மனுப்போட்டு கோர்ட் மூலம் அதனை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
கே.கணேஷ்: நான் பிறந்தபோது வைக்கப்பட்ட பெயர் சித்திவிநாயகம். நான் பிறந்தது சித்தார்த்தி வருஷம். இதன் காரணமாக ‘சித்தார்த்தன்' என்ற புனைபெயரில் எழுதியதுண்டு. மற்ற புனைபெயர் 'கலாநேசன்', 'கே.ஜி', 'மலைமகன்' இத்தியாதி.
கே.கணேஷ்:ஆரம்பக்கல்வி தோட்டத்து எல்லையில் இருக்கும் BaptishMission பெண்கள் கல்லூரியில் சிங்களத்தில் படித்தேன். பெண்கள் கல்லூரியென்றாலும் சிறுவர்கள் சேரலாம். நான் முதலில் கற்ற மொழி சிங்களம்.அங்கு ஓரிரு ஆண்டுகள் படித்தேன். பின்னர் கண்டி St Anthony's கல்லூரியில்படித்தேன். (அக்கல்லூரி தற்போது St Sylvester கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் இருந்தது.) எனது உறவினர் அங்கு ஆசிரியராக இருந்தார். அங்கு தமிழ்மொழி கிடையாது. ஆங்கிலத்தில் கற்றேன். தமிழில் பேசினால் தண்டனை.தமிழ்மொழியை எனது தாயார் வீட்டில் எனக்குக் கற்பித்தார்.
தனது நண்பிகளின் பிள்ளைகள் சிலருக்கும் எனக்கும் கையில் பிரம்போடு ஓர் ஆசிரியரைப்போல் கற்பித்தார். அன்றாடம் திருப்புகழ், ஒளவையாரின் வாக்குண்டாம், ஆத்திசூடி போன்ற நீதி நூல்களையும் தேவார திருவாசகங்களையும் புகட்டினார். அதுவே எனது குருதியில் ஓடுகிறது. தமிழ்மீது ஒரு தனிப்பற்று ஏற்பட்டது. தமிழகத்திலிருந்தும் நூல்களை அஞ்சல்வழி பெற்றுத்தந்தவர் தாயார். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை , ஆரவல்லி ,சூரவல்லி கதை, நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை போன்ற நூல்களையும் ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி நாவலையும் படித்தேன்.
தவிர அக்காலத்து தமிழாசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம்தமிழகத்து தமிழ் அறிஞர்களது நூல்களை இரவல் பெற்றுப் படித்தேன்.தவிரவும் அதிஷ்டவசமாக, கண்டியில் திருகோணமலைவீதியில் எனதுதந்தையார் பங்காளியாக இருந்த, ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த செம்பனூர்வாசியான ஆறு.சுப.சுப்பையா அம்பலம் அவர்களது கடையின் முன் பகுதியில்சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் அமைந்த 'போஸ்' சங்கம் வாசிகசாலை இருந்தது.அதனை தமிழ் ஆர்வலர்கள் ஆர்.எம்.செல்லையா போன்றோர் நடத்தினர்.
அந்த வாசிகசாலையில் மறைமலையடிகளின் 'ஞானசாகரம்' (அறிவுக்கடல்),இளவழகனாரின் (பாலசுந்தரம்), 'முல்லைக்கொடி', திரு.வி.க.வின சென்னைசைவ சித்தாந்த நூற்பதிப்பக்தின் செந்தமிழ்ச் செல்வி, கரந்தை தமிழ்ச்சங்கம் வெளியிட்ட 'தமிழ்ப்பொழில்' ஆகிய சஞ்சிகைகள் வந்தன. அவற்றைத்தொடர்ச்சியாக வாசித்தேன். இதன் தாக்கத்தினால் தமிழ் அறிவைவளர்த்ததோடு இந்தியாவில் உள்ள விடுதலை இயக்கம் குறித்தசஞ்சிகைகளையும் படித்ததனால் ஆங்கில ஆட்சியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டது.ஆங்கில மொழிமீது பற்றுக் குறைந்து தமிழ் மீது பற்று அதிகமாகியது.
கே.கணேஷ்:மதுரை தமிழ்ச் சங்கத்தில் கல்வி பயின்ற தஞ்சை அறந்தாங்கிவாசியான திரு முத்துராமலிங்கம், போஸ் சங்கத்தில் முக்கியஸ்தராக இருந்தார்.இவர் தமிழக மு.ரா.கந்தசாமிக் கவிராயரின் மகன் பண்டிதர் க.பழனிக்குமார்அவர்களின் மாணாக்கர். மதுரை தமிழ்ச் சங்கத்து எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்த்தேர்வில் முதல் வெள்ளித்தோடா' பரிசு பெற்றவர். இவர் அப்போது தனியார்நடத்திய கல்லூரி ஒன்றிலும் ஆசானாக இருந்தார். அக்கல்லூரி பிற்காலத்தில்'மகாத்மா காந்திக்கல்லூரி' என்றும் பின்பு Hindu Senior கல்லூரி என்றும்பெயர் பெற்றது. இவரே என்னை மதுரை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்விகற்கும்படி ஆலோசனை கூறினார். தனது ஆசிரியரான பண்டிதர் க.பழனிக்குமார்அவர்களுக்கும் கடிதம் கொடுத்தார்.
கே.கணேஷ்: நான் அறிமுகக் கடிதம் பெற்று சென்ற போது, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள உயர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக க.பழனிக்குமார் கடமையாற்றினார். நான் சென்றபோது சித்திரை - கோடை விடுமுறைக்காக தமிழ் சங்கக்கல்லூரி மூடியிருந்தது. அதனால் அந்த விடுமுறை நாட்களில், தனது மாணவர் ஒருவருடன் தங்கியிருக்க திரு க.பழனிக்குமார் ஒழுங்குசெய்தார். அத்தோடு தமிழ்ச் சங்கத்தில் சேர்வதற்கு வேண்டிய பயிற்சியைக்கொடுத்தார். தமிழ்ச்சங்கக் கல்லூரியில் பாலர் வகுப்பு தேர்வு பெற்ற பின்,முறையே பிரவேச பண்டிதம், பாலபண்டிதம் முடிவாக பண்டிதர் தேர்வு நடைபெறும். பாலர் வகுப்புக்குரிய பாடங்களாக ஆறுமுக நாவலருடைய பாலபாடம்,ஒளவையாருடைய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்றவற்றையும் நாவலரின் உரைநடை வளத்தையும் பயிற்சி பெற வாய்ப்புக் கிடைத்தது.தவிரவும் யாப்பு இலக்கண நெறிகளை உணரவும் வெண்பா பயிற்சி பெறவும்,நளவெண்பா போன்ற நூல்கள் பாடநூல்களாக அமைந்தன. இவற்றில் பண்டிதர் க.பழனிக்குமார் எனக்குத் தந்த பயிற்சி, தமிழ்ச் சங்கத்திலே சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. பின்னர் தமிழ்ச் சங்கத்தில் தங்கியிருந்து 1934 முதல் அங்கு கல்விகற்றேன். தமிழ்ச் சங்கம், இராமநாதபுரம் அரசரின் உறவினரான சேத்தூர் ஜமீந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களது ஆதரவுடன் தொடங்கப்பட்டது. மாணவர்கள் தங்குவதற்கு உறைவிடமும் இலவசக் கல்விபெற வாய்ப்பும் கிடைத்தன.
கே.கணேஷ்:சிறிது காலத்திலேயே நான் தமிழ்ச் சங்கத்தை விட்டுவிலக வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. எனது சைவஉணவு காரணமாக பகல் இரவு சாப்பாட்டிற்கு வெளியே சென்று உணவருந்தி வரவேண்டிய நிலை. போகும் வழியில் 'ஜதீந்தாஸ் நிலையம்' என்ற வாசிகசாலை அமைந்திருந்தது. இந்த வாசிகசாலை பாரதியாருடன் நெருங்கிய தொடர்புடைய ரா.ஸ்ரீநிவாச வரத ஐயங்காரின் நன்கொடையில், அவரது மனைவி பத்மாசினி அம்மாள் நினைவாக இயங்கி வந்தது. இந்த வாசிகசாலையில் வரும் ஏடுகளை தொடர்ந்து படிக்க வாய்ப்புக் கிடைத்தது.ஜதிந்தாஸ் நாட்டுப்பற்று காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்டவர். சிறையில் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு சரியில்லை என்ற காரணத்தால் அறுபத்து மூன்று நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி. அவரது நினைவாக அமைக்கப்பட்டதே ஜதீந்தாஸ் நிலையம்.
இந்த நிலையம் காங்கிரஸ் இளைஞர்களால் அமைக்கப்பட்டது.அத்தோடு இணைந்து மேலே குறிப்பிட்ட வாசிகசாலை அமைந்திருந்தது.அங்கு ஏற்பட்ட நண்பர்கள் தொடர்பால், அவர்கள் என்னைத் தம்முடன் இணைந்து கொள்ளும்படி வேண்டினர். இதில் உறுப்பினராக இருந்த, தற்போது இந்திய அரசின் தியாகச் சின்னம் தாமிர விருது பெற்றவரும், திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ளவருமான‘இ.மா.பா.' என்ற இ.மாயாண்டி பாரதியின் நட்புக் கிட்டியது. அவருடன் 70,மேலைமாசி வீதி இல்லத்தில் தங்கி தமிழ்சங்கக் கல்லூரியில் பாடம் கற்று வந்தேன்.
அக்காலத்தில் 34, 35 களில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்ததால் ஜெயப்பிரகாஷ் நாராயன், சந்திரபோஸ் போன்றவர்கள்,காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவு போன்று இயங்கிய 'காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி'யில் (காங்கிரஸ் அபேதவாதக் கட்சியில்) இருந்தார்கள். அந்தக்கட்சி சார்ந்த அன்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயன் எழுதிய Why Socialism அபேதவாதம் ஏன்? என்ற நூலும்,ஜவகர்லால் நேரு எழுதிய Whither India - இந்தியா எங்கு செல்கிறது? என்ற நூலும், அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய'சாம்ய வாதம்' என்ற நூலும் வழிகாட்ட எனக்கு இடதுசாரிக் கொள்கைளில் ஈடுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக 'ஆக்ரா'வில் இருந்த அபேதவாதக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதன் காரணாக இந்திய இரகசிய பொலிசார் என்னை விசாரிக்க, தமிழ்ச்சங்க தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டனர்.பொதுவாகவே அக்காலத்தில் உயர் பதவி வகித்தவர்கள் அரச விசுவாசிகளாக இருந்தனர். மிதவாதியான தலைமை ஆசிரியர் என்னை அழைத்து "நீ காங்கிரஸ் அங்கத்தவனா?" என்று கேட்டார்.
நான், "இல்லை......அக்கொள்கையில் ஈடுபாடு உடையவன்” என்று சொன்னேன். அதற்குத் தலைமை ஆசிரியர், “நீ இன்று ஈடுபாடு என்பாய், நாளை பாம்(வெடிகுண்டு)போடுவாய் - நம்பமுடியாது” என்றார். என்னை எச்சரித்தார். ஏற்கனவே நான் ராமநாதபுரம் சேது சமஸ்தான உறவினரான - மதுரை காங்கிரஸ் பிரமுகர் சிதம்பர பாரதி சிபாரிசுடன் காங்கிரஸ் தொடர்புடைய ராஜாராம் பாண்டிதேவரிடம் இருந்து சிபார்சுக் கடிதம் பெற்றிருந்தமையால், “பாலர் வகுப்புத்தேர்வு' முடியும்வரை படிக்க அனுமதி தருகிறேன். அதுவரை இங்கு கற்கலாம்.அதன்பின்னர் விலகிவிடவேண்டும்” என்றார் தலைமை ஆசிரியர். அதன்காரணமாக நான் சிலமாதங்களில் தமிழ்ச்சங்கக் கல்லூரியை விட்டு விலகவேண்டியதாயிற்று.
கே.கணேஷ்:சென்னைப் பல்கலைக்கழக 'வித்துவான் நுழைவுத் தேர்வு'விண்ணப்பம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இத் தேர்வானது எஸ்.எஸ்.எல்.சி.வகுப்பு தமிழ் இலக்கிய பாடத்திட்டம் சார்ந்த கேள்விகளுடன் வித்துவான் நுழைவுத்தேர்வு மாணவர்களுக்காக மேலதிகக் கேள்விகளைக் கொண்ட வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். அதற்கென நான் விண்ணப்பப் பத்திரத்தை அனுப்புவதற்குக் கடைசி நாள் மதுரை Treasury இல் கடைசி விண்ணப்பதாரனாய் சென்றேன். உயர் அதிகாரி அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். தேர்வில் சான்றிதழ் பெற்று திருவையாறு அரசக் கல்லூரியில் சேர்ந்து எனது கல்வியைத் தொடர்ந்தேன்.
கே.கணேஷ்: நான் இலங்கைக்குத் திரும்பிய பின்னர், சித்தாரிப்பேட்டையில்இருந்த ம.கி.திருவேங்கடம் என்பாரை ஆசிரியராகக் கொண்டு லோகசக்த ிஇதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அது சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும், இளைஞர்களைக் கவர்வதாகவும் இருந்தது.அரசியல், இலக்கியம் சார்ந்திருந்ததால் அதற்குப் பெரும் ஆதரவு இருந்தது.இந்த இதழ் சக்திதாசன் சுப்பிரமணியம், கே.இராமநாதன், இ.மாயாண்டி பாரதி ஆகியோர் அமைத்த இளைஞர் காங்கிரஸ் என்ற நிறுவனத்தின் ஆதரவில் வெளிவந்தது.
இ.மாயாண்டி பாரதி எழுதிய 'படுகளத்தில் பாரதி தேவி' என்ற நூல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி அதிலிருந்து கிடைத்தவருமானம் லோகசக்தி வெளிவர உதவியது. அத்துடன் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தையும் நடத்தினார்கள். மாயாண்டி பாரதியுடன் தொடர்பு கொண்டு இந்த இதழுக்கு நான் கட்டுரைகள் கவிதைகள் எழுதினேன். இந்த இதழுக்குநான் சந்தாவும் சேர்த்து அனுப்பினேன். இந்தத் தொடர்பால் கே. இராமநாதனின் தொடர்பும் கிடைத்தது.
கே.கணேஷ்:கே.இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியத்துடன் திருவி.க.வின்நவசக்தியில் பணிபுரிந்தவர். இவர்களைப் பற்றி திருவி.க. தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். கே.இராமநாதன் பிற்காலத்தில் இலங்கை வந்து சமசமாஜக்கட்சி நடத்திய 'சமதர்மம்' என்ற ஏட்டிற்கு ஆசிரியராக இருந்தார். இவர் பல தொழிற்சங்கங்களை அமைத்தார். பிற்காலத்தில் சமசமாஜக்கட்சி பிளவுபட்டபோது, B.L.P. கட்சி எனவும், யுனைட்டெட் சோஷலிஸ்ட் பார்ட்டி (U.S.P)எனவும் வழங்கியது. கே. இராமநாதன் சமதர்மம் ஏட்டிலிருந்து விலகி யு.எஸ்.பி.கட்சியின் சார்பில் தேசாபிமானி என்ற இதழின் ஆசிரியரானார். யு.எஸ்.பி.கட்சி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரை மாற்றிக்கொண்டது. நான் கே. இராமநாதனுடன் இணைந்து தேசாபிமானியிலும் நவசக்தியிலும் பணிபுரியவாய்ப்புக் கிடைத்தது.
கே.கணேஷ்:கே.இராமநாதன் இலங்கையில் 'சுருட்டுத் தொழிலாளர் சங்கம்','கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம்' போன்ற தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். அதில் பல மலையாளிகள் இருந்தனர். அதனால் கேரளநாட்டு(மலையாள) அரசியல் இலக்கியத் தொடர்புகள், முற்போக்குச் சிந்தனைகள் ஏற்பட்டன. இவர்கள் வாயிலாக கேசவதேவ், சங்கரகுருப்பு, தகழி சிவசங்கரன்பிள்ளை, பிரேம்ஜி ஆகியோரது இலக்கியங்களை அறிந்து கொள்ளவாய்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முற்போக்கு இலக்கியத்தில் ஒரு பற்றுதல் ஏற்பட்டது. (பிற்காலத்தில் தேசாபிமானியில் பணிபுரிந்த அச்சுவேலி ஞானசுந்தரம் பிரேம்ஜியின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டு தன்பெரையும் பிரேம்ஜி என மாற்றினார்).
கே.கணேஷ்:நான் மதுரையில் இருக்கும்போதே மணிக்கொடி சஞ்சிகைய ைவாசிக்கத் தொடங்கினேன். திருவையாறில் இருக்கும்போதும் மணிக்கொடி வாசகனாக இருந்தேன்.பின்னர் மணிக்கொடியில் எனது ஆசாபாசம், அதிஷ்டசாலி என்ற கதைகளை எழுதினேன். மணிக்கொடி எழுத்தாளரான பி.எஸ்.ராமையாவுடன் எனக்குக் கடிதத்தொடர்பு இருந்தது. அவர் 'அன்டன் செக்கோவ்' ரஷ்ய சிறுகதை ஆசிரியருடைய சிறுகதைகளையும், அக்காலத்து பெயர்பெற்ற ஆங்கில எழுத்தாளர் John Galsworthy எழுதிய Forsyte Saga' வரிசை நூல்களையும் படிக்கும்படி கூறினார். அவ்வகையில் நான் அவற்றை ஆர்வத்துடன் படித்தேன். மணிக்கொடி ஆசிரியராக இருந்த ப.இராமசாமி பிற்காலத்தில் இலங்கைக்கு வந்தபோது அவருடன் மலைநாட்டுக்குச் சென்று மணிக்கொடிக்கு சந்தா சேர்த்தோம்.
கே.கணேஷ்:இரண்டாவது மகாயுத்த காலத்தில் லண்டனில் தங்க நேர்ந்த டாக்டர் முல்கராஜ் ஆனந்த் அவர்களது Untouchables என்ற நாவலை London Lawrance And Wishart நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதை நான் வாசித்து,லண்டனில் பி.பி.சியில் பகுதிநேர நிருபராக கடைமையாற்றிக் கொண்டிருந்த முல்க்ராஜ் ஆனந்த்துடன் தொடர்பு கொண்டேன். அந்நூலை மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் அனுமத ிபெற்று மொழி பெயர்த்தேன். அவரது முற்போக்குச் சிந்தனைகள் என்னைக் கவர்ந்தன.
அது இரண்டாவது மகாயுத்தகாலம். அதனால் அவர் அக்காலத்தில் இந்தியாவுக்கு திரும்பிவர முடியாத நிலையில் இருந்தார். பிற்காலத்தில் அவர் இந்தியாவுக்கு வந்து, பம்பாயில் தங்கியிருந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை , கே. அப்பாஸ்,கிருஷ்ணசந்தர், பிரேம்சந்த் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார்.அப்போது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதன் கிளைகள ைஅமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தபோது, கொம்பனித் தெருவில் உள்ள Polski-பொல்ஸ்கி ஹோட்டலில் (தற்போதைய Nippon Hotel) 'அகில இலங்கை எழுத்தாளர் சங்கம்' ஆரம்பிக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்த அடிகள் தலைவராகவும், மார்ட்டின் விக்கிரமசிங்கா உப தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். டாக்டர் சரத் சந்திரவும் நானும் (கே.கணேஷ்) இணைச் செயலாளர்களாகவும், பி.கந்தையா அவர்கள் பொருளாளராகவும்,தேர்ந்தெடுக்கப்பட்டோம். டாக்டர் சரத் சந்திர மேற்படிப்புக்காக லண்டன் சென்றதும் அதன் இயக்கம் குன்றியது.
கே.கணேஷ்: 'Bombay Chronicle' என்ற பத்திரிகையின் வாரப்பதிப்பில்,Last Page' என்ற பத்தி எழுத்துக்கள் எழுதுவதன் மூலம் கே.ஏ.அப்பாஸ் அக்காலத்தில் பிரசித்தமாகியிருந்தார். அந்தப் பத்தி எழுத்துக்களை நான் விரும்பிப் படிப்பேன். இதன் காரணமாக அப்பாஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவரது சிறுகதைகள் பம்பாயில் வெளியான கம்யூனிஸ்ட்பத்திரிகைகளான People's Front, People's Age ஆகிய வாரப் பதிப்புகளில் வெளிவந்தன. குறிப்பாக காஷ்மீர் மக்கள் நடத்திய மன்னர் ஆட்சி எதிர்ப்புப் போராட்டத்தை சித்திரிக்கும் ‘குங்குமப் பூ' (Saffron Blosons) என்ற சிறுகதையின் அமைப்பும் அதனுடைய கருப்பொருளும் உருவ அமைப்பும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதை உடன் தமிழில் மொழிபெயர்த்து அவரது அனுமதி பெற்று தென்னிந்திய இதழ்களில் வெளியிட்டேன்.
பின்னர் அவரது பல சிறுகதைகளை மொழிபெயர்த்து தமிழக சஞ்சிகைகளில் வெளிவரச் செய்தேன். சென்னையில்நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் வருகை தந்தபோது நானும் அங்கு சென்று முதன் முதலில்அவரை நேரில் சந்தித்தேன்.
கே.கணேஷ்:அக்காலத்தில் சென்னை, மதராஸ் மாநிலமாக விளங்கியது.கேரளம் தமிழ்நாடு கன்னடா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மாநிலமாகவும் சென்னை தலைநகராகவும் விளங்கியது. சென்னையில் நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவிற்கு கே.ஏ.அப்பாஸ் வந்திருந்தார். அப்பொழுது ஆந்திரக்காரராகிய ஜஸ்டிஸ் ராஜமன்னார் மேல்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார். அவருடைய விருந்தினராக கே.ஏ.அப்பாஸ் இருந்தார். அவரை நான் நீதிபதியின் வீட்டில் சந்தித்தேன். சந்தித்தபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்திலும் அமைப்பது பற்றிப் பேசினோம். இதன் விளைவாக பின்னர் ஒரு தொடக்கக் கூட்டத்தை மைலாப்பூர் Tutorial College ஏ.ஜி.வெங்கடாச்சாரி அவர்கள் தலைமையில் நடத்தினோம்.
தி.க.சி.,தமிழொளி, குயிலன், சக்திதாசன் சுப்பிரமணியம், ஆர்வி, சாண்டில்யன் புனைபெயருடைய சுதேச மித்திரன் துணை ஆசிரியர் திரு பாஷ்யம் ஐயங்கார் போன்றோர் துணையுடன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. இதற்கு நான் பின்னணியில் இருந்து இயங்கினேன்.
கே.கணேஷ்: முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டகாலகட்டத்தில், நானும் அப்பாஸும் சேர்ந்து, கல்கியை சென்று பார்த்தோம்.அப்போது கல்கி கீழ்ப்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி - ரி.சதாசிவம் தம்பதியினரின் இல்லத்தில் இருந்தார். அவர்கள் எமக்குப் பகல்போசன விருந்து அளித்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னால் மொழிபெயர்க்கப்பட்ட அப்பாஸின் கதைகளை கல்கியில் தொடர்ச்சியாக வெளியிட கல்கி உடன்பட்டார்.அவ்விதமே பல கதைகள் கல்கியில் மணியனின் சித்திரத்துடன் வெளியாகின.அக்கதைகள் பின்னர் குங்குமப் பூ என்ற தலைப்பில் தி.ஜ.ரா. அவர்களுடைய முகவுரையுடன் சென்னை இன்ப நிலைய வெளியீடாக இரண்டு பதிப்புகளாக வெளிவந்தன.
கே.கணேஷ்:அகில இலங்கை எழுத்தாளர் சங்கம், டாக்டர் சரத் சந்திரமேற்படிப்புக்காக லண்டன் சென்றதால் செயற்படாமல் போயிற்று.40:-சிறிதுகாலத்தின் பின்னர் நானும் கே.இராமநாதனும் இணைந்து நடத்தியபாரதி பத்திரிகை எழுத்தாளர்கள், தேசாபிமானி எழுத்தாளர்கள், நவசக்திஎழுத்தாளர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைஆரம்பித்தோம். இதில் செ.கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், ,அ.ந.கந்தசாமி முதலியோரும் ஆரம்ப முயற்சிக்குப் பக்கபலமாக நின்றனர்.பிற்காலத்தே பிரேம்ஜி , இளங்கீரன், என். கே.ரகுநாதன், எச். எம்.பி.முகைதீன்,எஸ்.பொ., கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, டானியல், பி.இராமநாதன்,நீர்வைப் பொன்னையன், முருகபூபதி, சோமகாந்தன் போன்றோர் இணைந்துகொண்டனர். பின்னர் இதிலிருந்து கொள்கை முரண்பாடுகள் காரணமாகசிலர் பிரிந்து சென்றது வருந்தத்தக்கது.
கே.கணேஷ்:நான் இந்தியாவிலிருந்து திரும்பிவந்தபோது எனதுபெருமதிப்பிற்குரிய டி.ராமானுஜம் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள்இந்தியாவில் நடந்த போராட்டங்கள் பற்றி சுதந்திரனில் எழுதுமாறுபணித்ததோடு திரு செல்வநாயகம் அவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்தார்.தமிழுணர்வு இங்கும் ஏற்படக்கூடிய வகையில் நான் கட்டுரைத் தொடரைஎழுதினேன். பின்னர் 1956இல் சுதந்திரன் செய்தி ஆசிரியராக சிலகாலம்பணிபுரிய நேர்ந்தது. எஸ்.டி.சிவநாயகம் ஆசிரியராக இருந்தார்.
எஸ்.ராஜதுரை,சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி ஆகியோரும் அங்கு பணியாற்றினார்கள். அங்கு நான் பணிபுரிந்த காலத்திலேதான் எனக்குத் திருமணம் நடந்தது.அதன்பின்னர் நான் சுதந்திரனிலிருந்து விலகிவிட்டேன். டி.ராமானுஜம் அவர்களே எனது ஆளுமை வளர்ச்சிக்கு பேருதவி செய்தவர். அவரும் நானும்பிற்காலத்தில் கண்டியில் அமைந்த இலங்கை இந்தியன் காங்கிரஸின்இணைச்செயலாளராக இருந்தோம்.
கே.கணேஷ்:இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில், வீரகேசரிவாரப்பதிப்பில், திரு . லோகநாதன் அவர்களின் கீழ் நான் துணையாசிரியராகப்பணிபுரிந்துள்ளேன். அச்சமயம் கே.பி.ஹரன் ஆசிரியராகவும், கே.வி.எஸ். வாஸ்அவர்கள் செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததைத்தொடர்ந்து வெளிவந்த வீரகேசரி சுதந்திரமலர் தயாரிக்கும் பொறுப்பும் எனக்குக்கிடைத்தது. நான் பணிபுரிந்தபோது, வீரகேசரி முகவரிக்கு கம்யூனிஸ்ட்தொடர் புடைய ஏடுகளும், என் பெயருக்குக் கடிதங்களும் வரவேமுகாமையாளர்கள் அதனை விரும்பாமல் என்னை விலக்கிவிட்டனர்.
கே.கணேஷ்: கே. இராமநாதன் அவர்கள் பத்திரிகைத் தொடர்புகள் விட்டுப் போனதால் இந்தியா சென்று சுதேசமித்திரனில் நிருபராகப்பணியாற்றினார். அவரும் நானும் இணையாசிரியர்களாக 'பாரதி' சஞ்சிகையைத்தொடங்கினோம். மகாகவி பாரதியின் பெயரிலேயே ஒரு ஏடு தோன்ற வேண்டும்என்ற எண்ணத்துடன் இச்சஞ்சிகையைத் தொடங்கினோம். பீற்றர் கெனமன் அவர்களது வீட்டையே செயலகமாகக் கொண்டு சஞ்சிகை வெளிவந்தது.இதற்கு மூலதனம் வேண்டியபோது என்பெயரில் எனது தந்தை எழுதி வைத்த தலாத்துஓய தற்போதைய தலாத்து ஓய மத்திய மகாவித்தியாலயம் அமைந்திருக்கும் இடத்தை விற்று சஞ்சிகையை ஆரம்பித்தோம். சிறிதுகாலத்தின் பின்னர் கே. இராமநாதன் இந்தியா சென்றார். பின்னர் அ.ந.கந்தசாமி இணைந்து அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி பாரதியை நடத்தினோம்.
கே.கணேஷ்: 1950இல் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா காங்கிரஸ் மாநாடுஇந்தியாவில் நடந்தபோது, இங்கிருந்து இலங்கைப் பிரதிநிதியாக கட்சித்தலைவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க சென்றிருந்தார். அம்மாநாட்டில் ஒருமுக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதுவரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய பி.ஷி.ஜோஷி என்பாருடைய கொள்கைகள் மிதவாதத் தன்மை உடையன என்றும் அது இயக்கத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், பலாத்காரமுறையிலேயே பாட்டாளி அரசு அமைக்கத் திட்டமிட வேண்டும் எனவும் P.T.ரணதேவ் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கூட்டத்திற்கு ப.ஜீவானந்தம் அவர்களும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருந்தார்.தீர்மானம் காரணமாக, அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ய இருந்ததை முன்கூட்டியே உணர்ந்த டாக்டர் விக்கிரமசிங்கா ஜீவானந்தத்தை இலங்கைக்கு அழைத்து வந்தார்.
அக்காலத்தில் பயணச்சீட்டு விசா முறைகள் இருக்கவில்லை. எனவே அவரை அழைத்துவருவதில் எவ்வித கஷ்டமும் இருக்கவில்லை. இலங்கையில் கம்யூனிஸ்ட்கட்சி பிரசாரத்திற்காக அவரை அழைத்து வந்தார். அவரும் சிலகாலம் இலங்கையில் தங்கியிருந்து யாழ்ப்பாணம், மலையகம் முதலிய இடங்களுக்குச் சென்றுகூட்டங்கள் நடத்தினார். ஏற்கனவே அவரது ஜனசக்தி இதழில் நான் எழுதியிருந்தேன் . அதனால் அவருடன் தொடர்பு இருந்தது. கண்டிக்கு வந்தபோது எனது இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். இதற்கிடையில் இந்தியாவில் எதிர்பார்த்தது போலவே கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமான கட்சி எனத்தடை செய்யப்பட்டது. பல அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர்களில் சிலர் தமிழகத்தில் தலைமறைவாக கட்சிச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
கே.கணேஷ்:அக்காலகட்டத்தில், நாஞ்சில் நாடு கேரளநாட்டு மலையாளஆட்சியில் இருந்தமையால் தமிழகத்துடன் கன்னியாகுமரி, நாகர்கோயில்முதலிய பகுதிகள் தமிழகத்துடன் சேரவேண்டுமென ம.பொ.சி., கே.ரி.தங்கமணி,ப. ஜீவானந்தம் முதலியோர் போராடி வந்தனர். அதன் விளைவாக தற்போதுசென்னை மாநிலத்தோடு இப்பகுதிகள் சேர்ந்தது யாவரும் அறிந்ததே.அது தொடர்பாக அக்காலத்தில் நாகர் கோயிலில் எழுத்தாளர் மாநாடுஒன்று நடைபெற்றது. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, நாடகக் கலைஞர்கள் டீ.கே.சண்முகம் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரது ஆதரவில்இந்த மாநாடு ஏற்பாடாகி இருந்தது. இந்த மாநாட்டுக்கு ப.ஜீவானந்தம்அவர்கள் வாழ்த்துக்கூறி தந்து அனுப்பிய ஒரு மடலை, நான் அங்கு கொண்டுசென்று சேர்க்கவேண்டியிருந்தது. அதனை நாராயணன் என்பவரிடம்.சமர்ப்பித்தேன். அவர் அந்த வாழ்த்துச் செய்தியை, அஞ்ஞாதவாசம் செய்யும்ஜீவானந்தம் அவர்களிடமிருந்து கிடைத்த செய்தி ' எனக்கூறி கூட்டத்தில்அதனை வாசித்தார். அது பலரது கரகோஷத்தைப் பெற்றது.
கே.கணேஷ்: சென்னையில் அஞ்ஞாதவாசம் செய்த தமிழக மத்திய குழுவினர்,ப.ஜீவானந்தம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழகத்துடனும் இலங்கையுடனும் நான் தொடர்புள்ளவன் என்ற காரணத்தினாலும், பேச்சுமொழி நடையுடை பாவனைகளில் நான் இந்தியனாக இருந்தது எவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தினாலும் என்னை ஜீவானந்தம் அவர்களை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்படி பணிக்கப்பட்டது. இதனை பி.கந்தையா அவர்களே என்னைக் கேட்டுக்கொண்டார். வல்வெட்டித்துறையிலிருந்து அவரைத் தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆசிரியர், கார்த்திகேசு மாஸ்டர் ஆகியோரே இந்த ஏற்பாடுகளைச் செய்தனர். கார்த்திகேசு மாஸ்டர் வீட்டில் நான் தங்கியிருந்தேன். ப.ஜீவானந்தம் அவர்கள் அப்போது திருநெல்வேலி ரி.துரைசிங்கம் வீட்டில் தங்கியிருக்க நான் அங்கு சென்று அவரை சென்று அவரை அழைத்துச் செல்வதாக இருந்தது.இச்சந்தர்ப்பத்திலேதான் இந்தியாவில் ஹைகிரபாத் நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க மறுத்து கஜாக்கர்' படை அமைத்துப் போராட்டம் நடத்தினர். இதனை அடக்க ராஜாஜி அவர்கள் கவர்னராகவும் வல்லவாய்படேல் உள்நாட்டு அமைச்சராகவும் இருந்து எடுக்கப்பட்ட பொலிஸ் அக்ஷன் காரணமாக கிளர்ச்சி அடங்கியது. அக்காலகட்டம் வரை நானும் ஜீவானந்தமும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தோம். ஹைதரபாத் கெடுபிடிகள் காரணமாக இந்திய கவர்னர் ஜெனரல் அவர்களது ஆணைப்படி இந்திய கரையோரப்பகுதிகள் இந்திய கடற்படையினரது கடும் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்ததால்யாழ்ப்பாணத்தில் எனது தங்குதல் நீண்டுவிட்டது. ஜீவானந்தமும் நானும்நிலைமை சீரடையும்வரை யாழ்நகரில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அக்காலகட்டத்தில் ஜீவானந்தம் பல கூட்டங்களில் கலந்துகொண்டார்.அத்தோடு கம்யூனிஸம் என்ற நூலை துரைசிங்கம் வீட்டில் இருந்த காலத்தில் எழுதினார். அந்நூல் துரைசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. கார்த்திகேசு மாஸ்டர் இல்லத்திற்கு ப.ஜீவானந்தம் வரும்போது, டொமினிக் ஜீவா, எஸ்.பொ.,தி. ராஜகோபால் போன்றவர்கள் அவருடன் கலந்துரையாட வாய்ப்புக் கிட்டியது.ஜீவானந்தம் மீது கொண்ட பக்தியினால், டொமினிக் ஜீவா தனது பெயரை ‘ஜீவா' என்ற பெயருடன் இணைத்துக்கொண்டார்.
கே.கணேஷ்:ஜீவானந்தம் அவர்களை பாதுகாப்பாகத் தமிழகத்திற்குகொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு எனக்கிருந்ததன் காரணமாக நான் AirCeylon வானூர்தி மூலம் சென்னைக்குச் சென்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அக்காலத்தில் விசா, பயணச்சீட்டு தடைகள் கிடையாது.ஆனால் வெளிநாடு செல்லும் இலங்கையர் அக்காலத்தில் வழக்கிலிருந்த தமது அரிசிக் கூப்பனை உரிய அதிகாரியிடம் சமர்ப்பித்துப் பெற்ற ரசீதைக் காட்டியே பயணச்சீட்டு பெறமுடியும். எனது அரிசிக்கூப்பன் அப்போது கையில் இருக்கவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் அப்போது சிறுபான்மையோர் இயக்கத் தலைவராகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய, எழுத்தாளர் எஸ்.பொ.வின் மைத்துனர் திரு சுப்பிரமணியம் ஆவார். அவர் தனது தந்தையாரான திரு ஐயம்பிள்ளையின் அரிசிக்கூப்பனைக் கொடுத்து உதவினார். அதனை நான் பயன்படுத்திப் பயணித்தேன்.
சென்னையில், மவுண்ட் ரோட்டில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கட்டடத்தில் முற்போக்கு இலக்கிய நூல் விற்பனை நிலையம் அமைந்திருந்தது. அங்கு,பிற்காலத்தில் சரஸ்வதி இதழ் நடத்திய கோவை எஸ். விஜயபாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் தலைமறைவாக இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த ஏற்பாட்டின்படி சென்னை மரினா கடற்கரையில் ராஜஸ்தானிக் கல்லூரிக்கு எதிரே காந்தி சிலைக்கு அருகாமையில் நான்அருகாமையில் நான் தினமணி இதழை கையில் அடையாளமாக வைத்தபடி அமர்ந்திருந்தேன்.
காக்கி 'ஜோர்னா'ப்பையுடன் ஒருவர் வந்து என்னுடன் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி, வந்தவர் என்னை அடையாளம் கண்டு குழுக்குறியைக் கூறியவுடன் ஏற்பாடுகள் குறித்துப் பேசினோம். அதன்படி வல்வெட்டித்துறையில் இருந்து ஜீவானந்தம் புறப்பட்டு நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம் ஆகிய மூன்று இறங்குதுறைகளில்ஏதாவது ஒன்றில் வந்து இறங்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கரையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் வந்து இறங்குவது என்பதை தந்திமூலம் குழுக்குறியாக தெரிவிக்கவேண்டும்.அதாவது அப்பொழுது இராஜப்பேட்டையில் பொலிஸ் ஸ்ரேசன் பின்புறத்திலே அமைந்த கட்டிடமொன்றில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த குயிலன், தமிழ் ஒளி ராஜகோபால் ஆகியவர்களுக்கு இங்குள்ள ஏஜெண்ட் தந்தி அனுப்புவது போல குழுக்குறியாக செய்தி அனுப்பவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இறங்கு துறைகளுக்கு ஒவ்வொரு எண் குழூக்குறியாக வைத்துக்கொண்டோம். நாகப்பட்டினம் இறங்குதுறைக்கு 50 எனவும், காரைக்கால் இறங்குதுறைக்கு 100 எனவும், சிதம்பரம் இறங்குதுறைக்கு 150 எனவும் எண்ணிக்கையைக் குழுக்குறியாக அமைத்துக்கொண்டோம்.நான் ஏற்பாடுகளை முடித்து இலங்கை திரும்பி வந்ததும் 1948இல் ஒருதினம் ஜீவானந்தத்துடன் அக்கரைக்குப் புறப்பட ஏற்பாடாகி இருந்தது.முன் ஏற்பாட்டின்படி, பத்திரிகை ஏஜெண்ட் தந்தி கொடுப்பதுபோல, "இத்தனையாவது இதழில் 50 பிரதிகள் கூடுதலாக அனுப்பவும்” எனத் தந்தி கொடுத்து,அக்கரையில் உள்ளவர்களுக்கு நாம் புறப்படும் திகதியையும், கரைசேரும் இறங்கு துறையையும் தெரிவித்துப் புறப்பட்டோம்.
ஜீவானந்தம் உயரமானவர்,ஸ்டாலின் மீசை உடையவர், காது மந்தமுடையவர். இந்த அடையாளங்களைமாற்றுவதற்கு மீசையை மழித்து முஸ்லிம்போன்று சாரம் உடுத்து மாறுவேடத்தில் அழைத்துச் சென்றோம்.
கே.கணேஷ்:அக்காலத்தில் கிராம முக்கியஸ்தராக இருந்த திரு திருப்பதி அவர்களுடன் மகாலிங்கம் மாஸ்ரர் தொடர்பு கொண்டு எமது பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி அவர் ஓரிரவில் கார்த்திகேசு மாஸ்டர் வீட்டிலிருந்த என்னையும் துரைசிங்கம் வீட்டிலிருந்த ப.ஜீவானந்தத்தையும் காரில் அழைத்துச்சென்று, கடற்கரையில் சுங்கப்பகுதி காரியாலயத்தின் அருகே இருந்து புறப்பட்ட விசைப்படகு ஒன்றில் எம்மை ஏற்றி விட்டார்கள்.அந்த விசைப்படகு இரண்டாவது உலக யுத்தம் முடிந்தபின் ஆங்கிலேயக் கடற்படையினரால் ஏலம் விடப்பட்ட விசைப்படகு. அதில் நவீன ராடர் கருவிகளும் இருந்தன. அதனை வல்வெட்டித்துறை மீனவர்கள் வாங்கித் தமது தொழிலுக்குப் பாவித்தனர். சுங்கப் பகுதியினரிடம்கூட அத்தகைய விசைப்படகுகள் இருக்கவில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் - ஓரிரண்டு மணித்தியாலயத்தில் தமிழ் நாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போது இருந்தது.
அக்காலத்தில் சர்வசாதாரணமாக வல்வையில் உள்ளவர்கள் சிதம்பரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து பண்டமாற்று செய்வதற்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரியைக் கேட்பதற்கும், புதிய சினிமாப்படங்களைப் பார்ப்பதற்கும் சகஜமாகச் சென்று வந்தார்கள்.நாங்கள் சென்ற படகு புறப்படமுன் படகோட்டிகள் செல்வச்சந்நிதி முருகன ைவேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து புறப்பட்டார்கள்.
அக்கரை செல்லும் வழியில் பல படகுகள் எதிரே வந்தன.அவர்கள் கிராமபோன் குழாய் போன்ற அமைப்புள்ள குழாயை வாயில் பொருத்தி பலத்த சத்தத்தில் பரிபாஷையில் வள்ளங்களுக்கிடையே ஏதோபேசிக் கொண்டார்கள். எதிரே சுங்கப் பகுதியினரின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறிச்சென்றார்கள்.நாங்கள் சென்ற படகு அதிகாலை நேரத்தில் நாகப்பட்டின கடற்கரையிலிருந்து சுமார் மூன்று மைல்களுக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டது. சுங்கப்பகுதியினரின் கண்ணோட்டத்திற்கு அகப்படாத முறையில் நாங்கள் கரையேற வேண்டியிருந்தது. அக்கரையில் இருந்து பாதுகாப்பான நேரம் என்பதை அறிவிக்க ஒளிவிளக்குச் சமிக்ஞை கிடைக்கும் வரை காத்திருந்தோம்.
கடலில் நங்கூரம் இடப்பட்டு பகல் முழுவதும் கடலில் தங்கியிருந்து மறுநாள் இரவு ஒளிவிளக்கு சமிக்ஞை கிடைத்ததும் புறப்பட்டோம். அங்கிருந்து 'நாகூர்தர்கா' (பள்ளிவாசல்) தெரிந்தது. விசைப்படகில் இருந்து இறக்கப்பட்டு சிறுவள்ளங்களில் தாம் கொண்டுவந்த பொருட்களுடன் காரைக்கால் அருகில் உள்ள அதிராமப் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இறக்கப்பட்டோம்.அங்கிருந்து ஒரு கோஷ்டியினர் வந்து மோட்டார் காரில் எம்மை அழைத்துச் சென்று காரைக்கால் பாக்கு வியாபாரியான ஒரு முஸ்லிம் அன்பரின் கடையில் எங்களைச் சேர்த்தனர்.
நாங்கள் திட்டமிட்டபடி போய்ச் சேரவேண்டிய இறங்கு துறையில் இறக்கப்படவில்லை. காரைக்கால் அப்போது ஆங்கில ஆட்சியில் இருக்கவில்லை; பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்திலிருந்தது. அதனாலேயே அங்கு சென்று இறங்குவது பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது. காரைக்காலைச் சேர்ந்த 'கல்கி பீடி' வள்ளங்கள் இறங்குதுறையில் எம்மை வரவேற்க வேண்டியவர்கள் காந்திருந்தனர். அதனால் ஜீவானந்தத்தை அந்த முஸ்லிம் அன்பரின் கடையில் விட்டுவிட்டு நான்மட்டும் சென்று அவர்களைக் கண்டு அடையாளம் அறிந்து அவர்களிடம் ஜீவானந்தம் அவர்களைச் சேர்த்தேன்.ஜீவானந்தம் காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்று சிலகாலம் அங்கு தலைமறைவாக இருக்கும்போது கைது செய்யப்பட்டார்.
கே.கணேஷ்:மத்திய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளான சோவியத்ரஷ்யா, ருமேனியா, பல்கேரியா, உக்கிரேன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கு நடந்த எழுத்தாளர் மாநாடுகளில் பங்கு பற்றினேன். பல்கேரியதேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், உக்கிரேன் எழுத்தாளர்களின்படைப்புகளையும் மொழி பெயர்த்ததன் காரணமாக அந்த நாடுகளில்நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளில் பற்குபற்ற அழைக்கப்பட்டேன்.
கே.கணேஷ்:மலையகத்தின் மூத்த எழுத்தாளரான அவருடன் எனக்குநேரடித் தொடர்புகள் இருக்கவில்லை. தேசபக்தன் நடத்தியபொழுது சந்தா சேர்ப்பதற்காக வீடுவந்து செல்வார். நான் அக்காலத்தில் சிறுவனாக இருந்தேன்.அவருடைய பத்திரிகை வாசகனாகவும் அவரது எழுத்துக்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தேன். திரு டி.ராமானுஜம் அவர்களின் மூத்த சகோதரர் டி.சாரநாதன் என்ற பிரசித்த பத்திரிகையாளர், கோ.நடேசைய்யார் மீனாட்சி அம்மை தம்பதிகளின் புதல்வியை மணந்த மருமகனாவார். இதனாலும் கோ.நடேசைய்யர் அவர்களது தொண்டும் எழுத்துக்களும் எனக்கு மிக நெருக்கமாயிருந்தன.
கே.கணேஷ்:ஜவர்ஹர்லால் நேரு இலங்கைக்கு வந்தபோது, இலங்கைவாழ் இந்தியர்களின் உதிரிச் சங்கங்கள் ஒன்றுசேர்ந்து ஒரே அமைப்பாகதனியொரு நிறுவனமாக செயல்பட வேண்டுமென அறிவுரை கூறினார். அதன்படிகொழும்பு கொள்ளுப்பெட்டியில் இந்தியன் கிளப் கூட்டத்தில் 1939ல் இலங்கைஇந்தியன் காங்கிரஸ் அமைப்பு நிறுவப்பட்டது. அதுவே பின்னர் 'இலங்கைதொழிலாளர் காங்கிரஸ்' என வழங்கியது. அதனின்று பிரிந்து 'ஜனநாயக46காங்கிரஸ்' அமைப்பு தோன்றியது.முதற் கூட்டத்திற்கு சென்றவர்களில் அம்பிட்டிய, தலாத்து ஓயாஇந்தியர் சங்கமும் போஸ் சங்கமும் கண்டிப் பகுதியின் பிரதிநிதிகளாகச்சென்றனர். பங்குபற்றியவர்களில் டி.ராமானுஜம், ராமையா ராஜப்பிரியர்,கே.ராஜலிங்கம் சோமசுந்தரம், தெல்தோட்டை பழனிசாமி, கே.கணேஷ்ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கே.கணேஷ்:'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில்இயற்றல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் கட்டளையை நிறைவேற்றும்முகமாகத்தான், மற்றத் துறைகளில் அதிகம் ஈடுபடாது மொழியாக்கத் துறையில்அதிக கவனம் செலுத்த நேர்ந்தது. அரச குடியேற்ற நாடாக - Crown Colonyஎன்ற பிரிட்டிஷ் அரசின் சலுகை பெற்ற பெரும் நாடாக இலங்கை அவர்கள்ஆட்சிக்காலத்தில் நிலவியது. பரந்த பாரதத்தினைவிட இத்தீவில் பேச்சு,எழுத்து, கல்வி உரிமைகளும் வாய்ப்புகளும் நிறைந்திருந்தன. அங்கு தடைசெய்யப்பட்ட நூல்கள் இங்கு சர்வ சாதாரணமாகப் பரவியிருந்தன.
உதாரணமாக சுபாஷ் சந்திரபோஸின் ‘Indian Struggle' (இந்தியப் போராட்டம் )என்ற நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பினும் இங்கு இறக்குமதியாகி,தலைப்புகளை மாற்றி இந்தியாவுக்குக் கடத்தப்பட்டன. இந்தியாவில்வெளிவந்தவுடன் விறுவிறுப்பாக இலங்கையை வந்தடையும் நூல்கள், பின்னர்அக்கரையில் தடைசெய்யப்பட்டு அபூர்வமாக அமைபவை, இங்கு பரவலாகக்கிடைத்தன. தவிரவும், ஐரோப்பிய இலக்கியங்கள் இங்கு சரளமாகப் புளங்கின.
இந்த நிலையில், இந்திய எழுத்தாளரும் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமானமுல்க்ராஜ் ஆனந்த் வெளியிட்ட Untouchables போன்ற நூல்கள் இந்நாட்டில் பரவியதைப்போல இந்தியாவில் அறியப்படவில்லை.பெங்குவின் வெளியீட்டினர் தொடங்கிய New Writing என்ற புதுமை இலக்கிய வரிசை இதழில், முல்க்ராஜ் ஆனந்த், இக்பால் அலி, ராஜாராவ்போன்றோரின் படைப்புகள் வெளியாகின. ஒரு இதழில் முல்க்ராஜ் ஆனந்தின் Barber's Trade Union (நாவிதர் சங்கம்) என்ற சிறுகதை வெளியாகியது.அதன் உணர்வும், உணர்த்திய புது உலக எண்ண உதய வெளிப்பாடும் என்னை ஈர்த்தன.
இரண்டாம் போர்க் காலத்தில் லண்டனில் தங்கியிருந்த முல்க்ராஜ் ஆனந்த், அப்போது பொதுமக்கள் எண்ண வெளிப்பாடுகளை உணர்த்தும் பேட்டி காண்பவராக இருந்தார். அவருடன் தொடர்பு கொண்டு, அவரது அனுமதி பெற்று அக்கதையை மொழிபெயர்த்து ‘சக்தி' இதழுக்கு அனுப்பினேன்.தி.ஜ.ர. அவர்கள் அதனைப் பாராட்டியதுடன் தொடர்ந்தும் பல மொழிபெயர்ப்புகளை வெளியிடும்படி தூண்டிக் கடிதம் எழுதினார். இவ்வகையில், அவர் ஆசிரியராக அமைந்த, 'மஞ்சரி', 'ஹனுமான்', 'ஹிந்துஸ்தான்', ஆகிய இதழ்களுக்கும் சிறுகதைகளை மொழிபெயர்த்து அனுப்பத் தொடங்கினேன்.பஞ்சாபி எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸ் அவர்களின் சிறந்த சிறுகதைகளை, இலங்கையனான நான், தமிழகத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றேன்.
இப்போது போலல்லாது, அக்காலத்தில்ஆங்கிலக்கல்வி தமிழகத்தைவிட இலங்கையில் உயர்நிலையில் இருந்தமையும்,ஆங்கில ஆர்வமும் பயிற்சியும் மெத்தனமாக இருந்தமையும் எனது முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தன. அத்துறையில் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது.மொழியாக்கத்திற்கு ஆங்கில மொழியே துணையாக அமைந்தது.அம்மொழியில் மொழியாக்கப்பட்டதை, என்னால் தமிழ் நாட்டுச் சூழலுக்கும்பண்பாட்டுக்கும் ஏற்ப தமிழாக்கப்பட்டன. இதற்கென மொழிபெயர்க்கப்படும்பிறநாட்டு வரலாறுகள், பண்பாடுகள், மக்களது வாழ்க்கை நெறிகள், சமயக்கோட்பாடுகள் இவற்றுடன் மரபு, குறியீடுகள், பழக்க வழக்கங்கள், சகுனங்கள்,சமய வழிபாடுகள் இவற்றை ஆய்வு செய்வதில் காலங்கழிந்தது; கழிகின்றது.
கே.கணேஷ்:மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கும். மொழி பெயர்க்கப்படும் இரு மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தவிரவும்நாட்டு மொழிமரபுகள்; வரலாறு சமூக அமைப்பு இயல் அனைத்திலும்ஓரளவேனும் அறிமுகமானவனாக இருத்தல் வேண்டும். இவற்றைப்பெற பலநூற்களில் பயிற்சியும் பல மக்களிடையே பெற்ற பயிற்சி அனுபவமும்பெற்றிருக்க வேண்டும்.தி.ஞா : தமிழில் மொழிபெயர்ப்புத்துறை வளர்ச்சி பெறுவதற்கு ஆரம்பகாலமுயற்சிகள் எந்த அளவிற்குப் பங்களிப்புச் செய்தன?கே.கணேஷ் : பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் பிறநாட்டுநல் ஞர் சாத்திரங்கள் தமிழில் வரத் தலைப்பட்டன.
சில சமயங்களில்மேலை நாட்டு உடைமாறி உள்நாட்டு வேட்டி சட்டை அணிந்து வந்ததுமுண்டு.புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எட்கார் வாலசையும், அகதா கிறிஸ்டியையும்உருமாற்றினர். ஷொவாக் ஹோம்ஸ் துப்பறியும் துரைசாமி ஆனார். மாப்பசானின்'அட்டிகை' சிறுகதை தமிழகத்து அக்கிரகாரத்திற்குள் புகுந்தது. ஜெரோம்கே ஜெரோம், ஓ ஹென்றி பாத்திரங்கள் உருமாறின. எனினும், பி. எஸ்.ராமையாசிட்டி நடத்திய மணிக்கொடி தோன்றியதும் இப் பம்மாத்துக்கள் மாறி, பலவெளிநாட்டுப் படைப்புகள் தமிழாக்கம் பெறுவதில் மதிப்பைப் பெற்றன. மொழிபெயர்ப்புக்கும் ஒரு அந்தஸ்த்து தோன்றியது. புதுமைப் பித்தன, புரசு பாலகிருஷ்ணன், தி.ஜ.ர., அ.கி. ஜெயராமன், கு அழகிரிசாமி, த.நா. குமாரசுவாமி,ப. ராமசாமி போன்றவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் முன்னணியில் நின்றனர். சிதம்பர ரகுநாதன் ரஷ்யஇலக்கியங்களையும் கவிதைகளையும் உயர்ந்த முறையில் தமிழ்ப்படுத்தினார்.
இதேபோல பன்மொழி வழங்கும் இந்திய நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மலையாளம், போன்ற மொழிகளில் தோன்றியபடைப்புக்களும் தமிழில் தோன்றவும் இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் அவ்வவ் மொழிகளில் பெயர்க்கப்படவும் ஆங்கில மொழி கருவியாக இருந்தது.திருக்குறள் திருவாசகம் போன்ற தமிழ் உயர் இலக்கியங்களின் பெருமையை,ஜி.யு. போப் மொழிபெயர்த்து, வெளிநாட்டவர் புகழ்ந்த பின்னரே தமிழர்களின் கண்களும் திறக்கத் தொடங்கின.
அயர்லாந்துக் கவிஞரான W.B.Yeats ஈட்ஸ் தாகூரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கு முன்மொழிந்து பெற்றுத் தந்த பின்னரே வங்காளிகளும் அவரைப் புகழத் தொடங்கினர்.
ஆங்கிலப் படிப்பின் காரணமாக ஷேக்ஸ்பியர், மில்டன், வாட்ஸ்வர்த், ஷெல்லி,பைரன் போன்ற புலவர்களின் ஆக்கங்களும் நவீனத் துறையில் முன்னின்றசார்ல்ஸ் டிக்கன்ஸ், வோல்டர் ஸ்கொட், பிரெஞ்சு எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் டூமாஸ், விக்டர் ஹ்யூகோ , ருஷ்ய மேதை லியோதோல்ஸ்தோய்,அன்டன் செக்கோவ், தொஸ்தொவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளின் ஆங்கிலமொழிபெயர்ப்புகளும் தமிழில் நவீனம் என்ற புனைகதைத் துறையை உருவாக்க உதவின.
கே.கணேஷ்:மேல் நாட்டு மரபுச்சொற்களை மரபு வழியறியாது நேரடியாகமொழிபெயர்க்கும்போது, அர்த்தத்தை அனர்த்தமாக்கிவிடுவதுமுண்டு. Go to Hell என்பதைத் தமிழ்ப் படுத்திய ஒருவர் 'நரகத்துக்குப் போ' என்று தமிழ்ப்படுத்தியிருந்தார். 'தொலைந்து போ, 'நாசமாய்ப் போ' என்பன போன்று மொழிபெயர்த்திருந்தால் நம் மரபை ஒட்டியதாக இருந்திருக்கும்.
ஆங்கிலத்தில் Uncle, Cousin என்பன தாய்வழி, தந்தை வழி உறவினர்களை வேறு வேறு உணர்த்துபவை அல்ல. இந்தியப் பண்பாட்டை உணர்த்தும்நெடுங்கதை மொழிபெயர்ப்பில் தன் உடன் பிறந்தவரின் மகனை அதாவதுசிற்றப்பன் தன் அண்ணன் மகனை அழைத்துச் செல்லும்பொழுது சில தாயைக்குறிக்கும் வகைச் சொற்களை உதிர்க்கிறான். அவனை Uncle என்றே மூலத்தில் குறிப்பிட்டதால் மாமன் என்றே மொழிபெயர்பாளர் குறிப்பிடுகிறார். உண்மையில் மாமன் அப்படிக் கூறான். அவ்விடத்தில் ஒரு சிற்றப்பனோ பெரியப்பனோதான் கூறமுடியும். இத்தகைய நம் மரபுகளையும் நோக்கி, நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யாது, இடம் பொருள் ஏவல் அறிந்து கையாள வேண்டிவரும்.
இதேபோன்று சமூகவியல், வரலாறு போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளன் உணர்ந்திருக்கவேண்டிய நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு, சீனநாட்டில் ஆடவர்கள் நம்மவர்கள் கொண்டை வளர்த்ததுபோல் சடை போட்டிருந்தனர். கொண்டை கர்நாடகமாகக் கருதப்பட்டது போல் புதுமைக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சடை வளர்த்தவர்கள் பழமை வாதிகளாகக் கருதப்பட்டனர். 1911இல் தோன்றிய புரட்சிக்கு முற்பட்ட காலங்களில் சடை வளர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகளாகக் கருதப்பட்டனர். முடியாட்சியை ஆதரிப்பவர்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய சின்னமான சடை ஆங்கிலத்தில் Pig Tail என்று வழங்கப்பட்டது. இதை பன்றி வால் என மொழிபெயர்த்தனர் சிலர். உண்மையில் இம்முடி மாற்றத் தத்துவத்தை உணர்ந்து மொழிபெயர்ப்பாளன் தன் வாசகர்களுக்கு உணர்த்தும் தன்மை பெற வரலாறு அறிந்திருத்தல்வேண்டும்.
மேல்நாட்டவர்களுக்கு விளக்கமாகத் தலைப்பாகையை வர்ணித்த முல்க்ராஜ் ஆனந்த் தனது ‘தீண்டாதான்' நூலில், பல அடி நீளமிக்க துணியை இத்தனை புரிமடித்துச் சுற்றிச் சொருக வேண்டும் என விரிவாக எழுதியிருந்தார்.நம்மவர்க்கு இதனை மொழிபெயர்க்கும் போது, தலைப்பாகை அணிந்திருந்தான் என்றால் போதுமானதல்லவா? இவ்விதம் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கபடும் சொற்கள் நேரடிமொழி பெயர்ப்புகள், தமிழ்மரபில், 'ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதுபோல்' ஆகிவிடுவதுமுண்டு.
பழந்தமிழ்ச் சங்ககாலம் முதல்வழிவழியாக வழங்கும் 'அருவி' என்ற அழகிய சொல் இருக்க, Water Fallsஎன்பதன் நேர்மொழிபெயர்ப்பான ‘நீர் வீழ்ச்சி' என்ற நீண்ட சொல்லும் தமிழில் இடம்பிடித்துக் கொண்டதை நோக்கலாம்.
இங்ஙனம் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உருமாறி உடைமாறி உணர்வுகளை ஒருமைப்பட உணர்த்தி மூல ஆசிரியரின் கருத்தை கற்பு நிலைமாறாது காப்பாற்றவேண்டிய கடமையுள்ளவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்கவேண்டும். மொத்தத்தில் இக் கூடுவிட்டு கூடுபாயும் பணியில், யாருக்காகஇலக்கியம் ஆக்கப்படுகின்றதோ அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட்கருத்தை மொழிபெயர்ப்பாளன் அனைவரும் புரிந்து கொள்ளும் நடையில் சுவைபட உணர்த்துவதே பெருங் கடமையாகும்.
கே.கணேஷ்: நான் இருக்கும் இடம் சுற்றுச் சார்புகள் சிங்களக் கிராமமாக இருக்கிறது. இந்நிலையில் தேயிலைத்தோட்டம் தொலை நோக்கிச் செல்ல நேர்ந்ததால், தேயிலைச் செடிகள் கண்ட வாய்ப்பே எமக்கு அறிய முடிந்தது.தவிர்த்து அங்கு வசித்த தொழிலாளிகளைப் பற்றியோ, தேயிலைப் பயிர்ச்செய்கை சூழ்நிலைகள் குறித்து அறிய எனக்குப் பெரிதும் வாய்க்கவில்லை. இலங்கை, தமிழகப் பள்ளிப் படிப்பு முடித்து நான் முப்பதை எட்டும் காலத்திலேயே மலை நாட்டுப் பகுதியில் நண்பர்கள் உறவினர்களுடன் தங்கி தேயிலைத் தோட்ட வாழ்க்கை முறைகளையும், சூழல்களையும் ஓரளவு அறிய வாய்த்தது. மற்றும் ஏடுகள், நூல்கள் வாயிலாகவே அறிய முடிந்தது.எனவே நான் வாழ்ந்த கண்டியச் சூழ்நிலையில் மலையகத்து மக்களது வாழ்வு குறித்து ஆக்கங்கள் படைக்கத் தகுதியற்றவனாக இருந்த நிலையில் கற்பனையில் கதைகள், கவிதைகளோ புனைய விரும்பவில்லை. ஒரு ஓட்டம் பார்த்து வந்து அவர்களது உள்ளாத்மாவையே உணர்ந்து விட்டதாகப் பம்மாத்துப் புரிய மனம் வரவில்லை. இதுவே மலையகத்தைக் குறித்து நான் கவனம் செலுத்த முடியாமையின் காரணமாகும்.
சமூகத்தின் பொருளாதாரச் சீர்கேடுகள், மேடுபள்ளங்கள் சரிசமன் ஆக்கப்பட்டு கீழ்நிலையில் உள்ளவர்களும் மேல் நிலையில் உள்ளவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை எய்தவேண்டும் என்ற சமதர்மக் கொள்கையில் எனக்குக் ஈடுபாடு இருந்தது. சாதி, வகுப்பு, இனபேதம் போன்றவற்றில் ஈடுபாடுகள் இத்தகைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்குமேயன்றி அதற்குத் துணையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அதனால் மலைநாடு என்று நான் தனியாக நோக்கவில்லை. சமத்துவ நிலை ஏற்படும் பொழுது பெருவெள்ளம் வந்து சிறு குப்பை கூழங்களை அழித்துச் சமநிலையாக்கி விடும் என்று நினைத்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக