எழுத்தாளர் கே. கணேஷ் அவர்களை நேர்கண்டவர் : எம்.ஏ.நுஃமான்
எம்.ஏ.நுஃமான்: வாழ்க்கையில் மதத்தின் பங்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கே. கணேஷ் : மதம் என்பது சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படுவது. அதற்கென்று ஒரு வழிமுறை இருக்கின்றது. எந்தச் சமயமாக இருந்தாலும் அது நமக்கு ஒரு நெறிமுறையை வகுத்துக்கொடுக்கிறது. அந்த நெறிமுறையில் எது நல்லது எது கெட்டது என்பதைப் பிற்காலத்தில் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எல்லா மதத்தினருக்கும் இறைவன் பொதுவானவன். ஒருசாராருக்கு மட்டும் உரியவன் அல்ல. இருப்பது ஒரே ஒரு இறைவன்தான். நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் குல்லா போட்டிருக்கிறீர்களா; வேட்டி கட்டி இருக்கிறீர்களா; சாறன் கட்டி இருக்கிறீர்களா; நாமம் போட்டிருக்கிறீர்களா என்பது முக்கியமில்லை, இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். ஆண்டவனுக்குப் பயந்துக்கிட்டு இருந்தோம் என்றால், நெறிமுறைகள் அது சட்டமாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். இல்லை என்றுசொன்னால் திக்குத் திசைமாறிப் போகும். தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது மாதிரி.
எம்.ஏ.நுஃமான்: நீங்கள் இறை நம்பிக்கையை மதங்களோடு, ஒரு குறிப்பிட்ட மதத்தோடு சேர்த்துப் பார்க்கவில்லையா?
கே. கணேஷ் : இல்லை, இல்லை. எல்லா மதங்களையும் நாம் ஆழ்ந்து படிக்க வேண்டும். சைவமோ, வைஷ்ணவமோ எல்லாத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மதங்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். மதங்களில் இருந்து நல்லவைகளைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையையும் ஒழுக்க நெறியில் வைத்திருக்க வேண்டும்.
எம்.ஏ.நுஃமான்:பொதுவாக மார்க்சியம் இருத்தல், அதாவது வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று சொல்கிறது.
கே. கணேஷ் : ஆமா.
எம்.ஏ.நுஃமான்: ஆனால் மதம் சிந்தனைதான் வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்று சொல்கிறது. இரண்டுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உண்டு.
கே. கணேஷ் : ஆமா! ஆமா, தற்போதுள்ள நிலையில் எல்லாவற்றையும் பொருளாதாரம்தான் பாதிக்கின்றது. ஆனால், என்னைக் கேட்டால் ஆத்மீகம் தான் மனிதனுக்கு அவசியமாகத் தெரிகிறது. இன்றைய அணுகுண்டு யுகத்தில் இது அவசியமாகத் தோன்றுகிறது. ”கடவுள் இல்லாவிட்டாலும் கடவுள் ஒருத்தரை சிருஷ்டி பண்ணிக் கொள்” என்று வால்டேயர்(Voltaire) சொன்ன மாதிரி ஒவ்வொரு மனிசனுக்கும் கடவுள் அவசியமாக இருக்கிறது. அதனால், ஒரு குறிப்பிட்ட மதத்தில் வெறிபிடிக்காமல் ஆத்மீக முறையில் போகும் எதையும் நாம் ஆதரிக்க வேண்டும்.
எம்.ஏ.நுஃமான்: இப்படிச் சொன்னால் என்ன?: நீங்கள் மார்க்சியத்தின் தத்துவார்த்த அம்சத்தை அதாவது பொருள் முதல்வாதத்தை அவ்வளவு பொருட்படுத்தவில்லை.
கே. கணேஷ் : தத்துவார்த்த அம்சத்தை இல்லை!
எம்.ஏ.நுஃமான்:ஆனால், அதன் அரசியல் அம்சத்தை நீங்கள் ஏற்றக்கொள்கிறீர்கள் என்று சொல்லலாமா?
கே. கணேஷ்: ஆம். சில தத்துவங்கள் ஏற்புடையதாக இருக்கின்றன.
எம்.ஏ.நுஃமான்:அந்த அடிப்படையில் தான் நீங்கள் மார்க்சிய இயக்கங்களுடன் தொடர்புபட்டு இருந்தீர்களா?
கே.கணேஷ்: ஆம். ஏனென்றால், மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பது போல இந்தத் தத்துவங்களினால் பொதுமக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று நினைத்தேன். சோவியத் ருஷ்ஷியாவை ஒரு சொர்க்க பூமியாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், எனக்கு அங்கு போக வாய்ப்புக் கிடைத்தபோது, அங்கு சென்று பார்த்தபோது அது சொர்க்க பூமியாக இருக்கவில்லை. ஆனால், ஒரு மாயையிலே தான் ரொம்பப் பேர் மயங்கி இருந்தார்கள். அந்த மாயையை விடுத்து உண்மையை ஊடுருவிப் பார்க்கும் போது அதனுடைய பல விசயங்கள் தெரிய வந்தன. உதாரணமாக ஸ்டாலின் கொடுமைகள். அதன் சாயல்தான் பல இடங்களிலும் நடக்கின்றது. இதையெல்லாம் பார்த்தபோது கடைசியில் எனது தீர்மானம் என்னவென்றால் மனிசன் நல்லா இருந்தா உலகமும் நல்லா இருக்கும். உலகம் நல்லா இருக்கிறதுக்கு மனிசன் நல்லா இருக்க வேணும்.
எம்.ஏ.நுஃமான்:இந்தக் கருத்து உங்களுக்குள் இளமைக் காலத்திலேயே இருந்ததா அல்லது இப்போது உங்களுக்குத் தோன்றுவதா?
கே. கணேஷ்: இளமையில் அம்மாவிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட மதக்கல்விதான் எனது அடிப்படை. அந்த வாய்ப்பு எனக்கு இருந்தது. அதை நான் விரிவுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். ஊடுருவிப் பார்க்கும்போது மதம் மனிசனுக்கு அவசியம். அதாவது ஒரு நெறிமுறை அவசியம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அந்த நெறிமுறையை மீறினால் பாதகம் ஏற்படுகிறது என்பதை நான் உணர்கிறேன்.
எம்.ஏ.நுஃமான்:ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு இந்தக் கருத்து இருந்தது?
கே.கணேஷ்:ஆமா! ஆமா, இந்தக் கருத்து உள்ளேயே இருந்தது.
எம்.ஏ.நுஃமான்:ஆனால், பொதுவாக உங்களைப் பற்றிப் பேசும்போது நீங்கள் ஒரு மார்க்சியவாதி – ஒரு இடதுசாரி - கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்றே சொல்லுவார்கள். நீங்கள் ஒரு பொருள் முதல்வாதி - ஒரு நாஸ்திகர் என்ற கருத்தே பலருக்கும் இருக்கின்றது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு முரண்பாட்டை நீங்கள் காணவில்லையா?
கே.கணேஷ்: வெளியில் உள்ளவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். உறவினர்கள் கூட என்னை ஒதுக்கி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்டு என்று ஒரு பட்டம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அது அவங்க அவங்களுடைய போக்கு. அதை நாம் குறை சொல்லுவதற்கில்லை. அவர்களுடைய கொள்கைகளும் எண்ணங்களும் அந்த மாதிரி இருந்தது. அவர்களுக்கு ஆழந்து பார்க்கக் கூடிய தன்மை கிடையாது. இன்றைக்கு இந்த சமுதாயத்தில் யாருக்குமே இது இல்லாமல் இருக்கு.
நான் ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு நான் ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு போயிருந்தேன். மோகன் குமாரமங்கலம்(1916-1973) பேசிக்கொண்டிருந்தார். நான் அழைத்துப் போயிருந்த நண்பர் ஒரு ட்றொட்ஸ்கியவாதி. அவரை ஒரு தீண்டாதவர் மாதிரி அங்கிருந்தவர்கள் ஒதுக்கிவைத்தார்கள். ட்றொட்ஸ்கி உண்மையிலேயே ஒரு பெரிய புத்திசாலி. அவர் கொலை செய்யப்பட்டார். அது எனக்குப் பெரிய தாக்கமாக இருந்தது. பின்னாளில் ட்றொட்ஸ்கியவாதிகளை ஒரு சாதிவகுப்பு மாதிரியே தள்ளி வைக்கிற நிலை இருந்தது.
எம்.ஏ.நுஃமான்:மதங்களில் இருக்கிற 'செக்ரேறியனிசம்'(sectarianism)மாதிரி.
கே.கணேஷ்:ஆம். அப்பிடி மதங்களில் இருக்கிற மாதிரி, ஒரு மதத்தையே அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். கம்யூனிசம் என்பதே ஒரு மதம் ஆகிவிட்டது. சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று எப்படிப் பிரிந்ததோ அந்த மாதிரி இவர்களும் பிரிந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் இப்போது கொள்கை வேறுபாட்டில் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நான் எல்லாவற்றையும் ஊடுருவி என்னுடைய கொள்கையை உருவாக்கிக் கொள்கிறேன், சுதந்திரமாக.
அதனால் அவர் அதிலையும் இருக்கமாட்டார், இதிலையும் இருக்கமாட்டார் என்று என்னைப் பற்றி சிலபேர் சொல்வார்கள். இப்படி நம்மில் சில இடதுசாரிகளும் இருந்துள்ளனர். எனக்கும் அதில் ஊடுருவிச் செல்வதற்கு இஷ்டம் இல்லாமல் போய்விட்டது. இதில் தீவிர பங்கு எடுக்காமல் போனதற்கு இதுவே காரணம். சும்மா இருப்பதே சுகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி இருப்பது. சும்மா மேடையில் ஏறாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இதுதான். ஏனென்றால் மௌனம் என்பது ஞானம். இது எனக்காக ஒரு சௌகரியத்துக்காக நான் சொல்வது. இது ஒரு Philosophy (மெய்யியல் கோட்பாடு) அல்ல. ஆனால் அதுதான் உண்மை. இன்றைக்கு இருக்கிற குத்து வெட்டுக்களைப் பார்க்கும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒழுக்கம் முக்கியமானதாகக் கருதினேன். அவ்வளவுதான். அந்த ஒழுக்கத்துக்கு வால்டேயர் கூறியது மாதிரி அது அவசியம் என்றுதான் நினைக்கிறேன்.
எம்.ஏ.நுஃமான்:மத நம்பிக்கை இல்லாமல் ஒருவன் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?
கே.கணேஷ்:கஷ்டம் என்று தான் நினைக்கிறேன். என்ன இருந்தாலும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் பிறக்கும்போதே மதத்தோடு பிறக்கிறான். அதில் உள்ள பண்பாடுகள், பழக்க வழக்கங்களில் வளர்கிறான். அவர் அவர் தேர்ந்தெடுத்த அந்தப் பண்பாட்டில் நல்லவை கெட்டவை எவை என்று தெரிந்துகொண்டான் என்றால் நல்லது தான்.
ஆனால் இப்பொழுது என்ன நிலை இருக்கிறது என்பது பிரச்சினைதான். இப்போது பழைய நிலை இல்லை. ஒரு வெறித்தன்மை ஏற்பட்டுப் போகிறது. அது ரொம்ப வருந்தத் தக்கது. இதைத்தான் ஃபண்டமென்றலிசம்(fundamentalism) என்கிறோம். இந்தப் ஃபண்டமென்றலிசம் இன்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு மதத்தில் மட்டும் என்று இல்லை. அதே மாதிரித்தான் அரசியல் கொள்கைகளும்.
ஃபண்டமென்றலிசம் என்றால் ஒரு வெறித்தன்மை. அந்த வெறித்தன்மையைப் போக்கி, உண்மையான நடுவுநிலைப் போக்கோடு ஆண்டவனைப் பார்த்தான் என்றால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருக்காது.
எம்.ஏ.நுஃமான்:தேசியவாதம் கூட ஒருவகையில் அதன் முதிர்ந்த வடிவத்தில் வெறித் தன்மைக்கு இட்டுச் செல்வதே. ஜேர்மன் தேசியவாதம், இத்தாலிய தேசியவாதம் எல்லாம் பாஸிசமாக வளர்ந்தது. அப்படிப் பார்க்கும் போது இன்றைய நிலையில் இலங்கையில் பௌத்த அல்லது தமிழ்த் தேசியவாதம், இந்தியாவில் வளர்ந்துள்ள இந்து தேசியவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கே.கணேஷ்: அந்தக் காலத்தில் உண்மையில் ஹிட்லரின் ‘மைன் கேம்ப்’ (Mein Kampf) மூன்று தரம் வாசித்துள்ளேன். ஹிட்லரின் கொள்கையை சிலர் இங்கு ஆதரிக்கவும் செய்தார்கள். தமிழ் நாட்டிலும் சிலர் ஆதரித்தார்கள். ஹிட்லர் ஜேர்மனியை மேம்படுத்தி விட்டார். இங்கும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றார்கள். சிலர் ஜப்பானையும் ஆதரித்தார்கள். இந்த மாதிரி தேசியவாதத்தினால்தான் ஒரு நாடு முன்னேற முடியும் என்றார்கள். உண்மையைச் சொல்லப்போனால் காந்தியந்தான் என்னைக் கவர்ந்தது. இந்திய தேசியவாதத்தில் காந்தியம் இருந்தது. அதனால் எனக்குக் காந்தியக் கொள்கையில் ஈடுபாடு இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று காந்தி சொன்னார். ஏனென்றால், அது institutionalized (நிறுவனமயம்) ஆகக் கூடாது என்றுதான். அரசியலில் அவ்வாறு நடக்கிறது. மதத்திலும் அவ்வாறு அமைப்பு முறைகள் உருவாகின்றன. இதனால் பல கோளாறுகள் வரத்தான் செய்யும். அரசியலில் இருந்தமாதிரி மதத்திலும் இது வந்துவிட்டால் அதுதான் பெரிய பிரச்சினையாகிறது. இதுதான் கடைசியில் அடிப்படைவாதமாகிறது. ஏறக்குறைய தேசியவாதமும் அதேநிலையில் தான் இருக்கிறது. மொழி, மதம், அரசியல் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. வேறுபாடு காட்டுகின்றது. இவை எல்லாவற்றையும் தாண்டிச் செல்வதற்கு ஒழுக்கம் என்கிற ஒன்று வேணும். ஒவ்வொருத்தரும் ஆத்மாவைச் சுத்தமாக்கிக் கொண்டால் தான் இவற்றை வெல்ல முடியும் என்பது என் கருத்து.
எம்.ஏ.நுஃமான்:மார்க்சியத்தில் முக்கியமாக உங்களைக் கவர்ந்தஅம்சங்கள் எவை?
கே.கணேஷ்: தொழிலாளர்கள், உழைப்பவர்கள் எல்லோருமே மிகவும் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள். இது நாம் கண்ணால் பார்ப்பது. மார்க்சியம் இவர்களுக்கு ஒரு சொர்க்கத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் பின்னால் பார்க்கும் போது அது ஒரு மாயையாகப் போய்விட்டது.
நாம் பாஸிசத்தைக் குறைசொன்னோம். கடைசியில் இவர்களும் பாஸிசத்தைத்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் மதங்களைச் சொன்ன மாதிரி. பெயரில்தான் கம்யூனிசம் இருந்ததே ஒழிய நடைமுறையில் இருக்கவில்லை. உண்மையில் போலந்திலும், செக்கோஸிலவாக்கியாவிலும் சுதந்திரத்தை நசுக்கிய முறை, கருத்துக்களைத் தன்னிச்சையாக வளர முடியாமல் செய்த ஒரு தன்மை, இவற்றையெல்லாம் பார்த்தபோது வேண்டாம் என்று ஆகிவிட்டது.
எம்.ஏ.நுஃமான்:ஒரு குறிப்பிட்ட கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்ற மார்க்சிய இயக்கம் போன்ற ஒன்று, அந்தக் கருத்து நிலையின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்க முனையும்போது இந்தமாதிரி நடக்கக்கூடிய அடக்குமறைகள் தவிர்க்க முடியாதவை என்ற ஒரு கருத்து இருக்கிறது. ரஷ்ஷியாவில் எவ்வளவோ அடக்குமுறைகள் இருந்தாலும் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்த அந்த நாட்டை ஒரு பெரிய சக்தியாக, பெரிய சமூகமாக வளர்த்தெடுப்பதற்கு லெனின், ஸ்டாலின் ஆகியோரின் சர்வாதிகார முறைமை பயன்பட்டிருக்கு என்ற ஒரு கருத்து உண்டு. அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கே.கணேஷ்: ஜேர்மனியிலும், இத்தாலியிலும் பாஸிசம் வளர்ந்தது. அந்த நாடுகளும் பெரும் சக்திகளாக வளர்ந்தன. ஆனால் நான் சொல்லுவது என்னவென்றால் aims and means, அதாவது நோக்கமும் வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் அந்த சமூகம் எதுவாக இருந்தாலும் நிலைத்து நிற்காது. ஜேர்மனியும், இத்தாலியும் யுத்தத்தில் அழிந்தன. ஜப்பானும்தான் அழிந்தது. மீண்டும் அவற்றைக் கட்டி எழுப்ப வேண்டி இருந்தது. இவற்றையெல்லாம் கூர்ந்து பார்க்கும் போது அதீத (அதிதீவிர?) சித்தாந்தங்கள் உருப்படுவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எம்.ஏ.நுஃமான்:முசோலினி, ஹிட்லர் ஆகியோரின் சர்வாதிகார முறைக்கும் ஸ்டாலினின் சர்வாதிகார முறைக்கும் இடையில் நீங்கள் வேறுபாடு ஒன்றையும் காணவில்லையா?
கே.கணேஷ்: ஆரம்பத்தில் கம்யூனிசம் சிறந்ததாகத் தெரிந்தது. ஏனென்றால் அது பொதுமக்களை மையமாகக் கொண்டிருந்தது. ஒரு நாட்டை என்று இல்லாமல் உலகம் முழுவதையும் அது கருத்தில் கொண்டிருந்தது. புரட்சியினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. பாட்டாளிகள் மட்டுமல்ல விவசாயிகளும் புரட்சியின் பங்காளிகள் என்ற நிலை இருந்தது. ஆனால் பாட்டாளிகள், கைத் தொழில் துறையில் இருப்பவர்கள்தான் முக்கியத்துவம் பெற்றார்கள். அப்புறம் மாஓசேதுங் வந்தார். அவர் வந்த பொழுது நினைத்தோம். ஆனால் கடைசியில் பார்க்கும்போது விவசாயிகளுக்கு மேலாக கைத்தொழில் துறைதான் மேலாதிக்கத்துக்கு வந்தது. விவசாயிகள் கஸ்டத்துக்காளாயினர். இத்தகைய நடைமுறையைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது எல்லா முறைகளும் சுயநலத்தில் தான் முடிவடைகின்றன என்று கூறத் தோன்றுகின்றது.
எம்.ஏ.நுஃமான்:சோவியத் ரஷ்ஷியாவின் வீழ்ச்சிக்கும் உலகளாவிய ரீதியில் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே காரணியாக இருந்திருக்கிறது என்று கூறப்படுகின்றது. அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
கே.கணேஷ்: அதில் சந்தேகமே கிடையாது. ரஷ்ஷியரும் அமெரிக்காவின் தத்துவங்களை அதாவது முதலாளித்துவத்தை உடைப்பதற்கு முயன்றார்கள். அமெரிக்கா தனது சக்திகளைப் பயன்படுத்தி ரஷ்ஷியாவை உடைக்க முயன்றது. CIA போன்றஸ்தாபனங்கள் இதில் முயன்றன. ரஷ்ஷியர்களும் இதைச் செய்தார்கள். ஒருவர் மற்றவருடைய சித்தாந்தத்தை அழிப்பதற்காகவும் தங்கள் சித்தாந்தத்தை வளர்ப்பதற்காகவும் வேலை செய்தார்கள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டே மற்றவருடைய தத்துவத்தைப் பற்றிக் குறை சொன்னார்கள். அந்தக் குற்றச் சாட்டுக்களில் உண்மையும் இருந்தது.
எம்.ஏ.நுஃமான்:தற்போதைய நிலையில் உலகளாவிய ரீதியிலும்சரி, தேசிய ரீதியிலும் சரி, சமூக ஏற்றத் தாழ்வுகள், முரண்பாடுகள், மோதல்கள் எல்லாவற்றையும் நீக்கி மனித விடுதலையைக் கொண்டுவர முடியுமாக இருந்தால், எந்த அமைப்பு மூலமாக அதைக்கொண்டு வரலாம் என்று நினைக்கிறீர்கள்?
கே.கணேஷ்:எந்த அமைப்பு என்பதற்கு அடிப்படை என்ன என்று கேட்டால் கல்வி அடிப்படையில் இருந்துதான் தொடங்க வேண்டி இருக்கிறது. புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கல்வி வேண்டும். புதிய தலைமுறைக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு , நேர்மை போன்ற நல்ல உயர்ந்த பண்புகளை, விழுமியங்களை ஊட்ட வேண்டும். அதில் இருந்துதான் புதிய சமுதாயம் வரமுடியும். இப்போது இருப்பதைப் பற்றி நான் சொல்லப்போனால் என்னை ஒரு ஃபெசிமிஸ்ற்(pessimist), அவநம்பிக்கைவாதி என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் நான் சொல்வது ஃபெசிமிசம்(pessimism) அல்ல. புதிய முறையில் தான் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அது படிப்படியாகத்தான்வரும். அது தானே உருவாகும். அதாவது கலியுகம் மறைந்து திருதயுகம் வரவேண்டும்.
எம்.ஏ.நுஃமான்:பொதுவாக எல்லா மதங்களும் மக்கள் மத்தியில் ஒழுக்கத்தையும், இறை நம்பிக்கையையும் பலப்படுத்தி அதன் மூலம் கட்டுப்பாடான ஒழுக்கம் மிகுந்த உயர் மனிதர்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், மதங்கள் அந்தக் குறிக்கோளில் இதுகாலவரை வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியவில்லை. மதங்களின் பெயரில் பெரிய அனர்த்தங்கள் நடைபெற்றுள்ளன.
கே.கணேஷ்: fundermentalism அது, இது என்று எத்தனையோ உருவாகியுள்ளன.
எம்.ஏ.நுஃமான்: ஆம். ஆனால், இப்போது நீங்கள் அந்த மாதிரியான ஒரு கருத்தைத்தான் சொல்லப் பார்க்கிறீர்கள்.
கே.கணேஷ்: ஆமா.
எம்.ஏ.நுஃமான்:அது நடைமுறையில் சாத்தியமா?
கே.கணேஷ்:சாத்தியமில்லை.
எம்.ஏ.நுஃமான்:மதங்கள் எல்லாம் அரசியல் மயப்பட்டுப் போன இன்றைய நிலையில், இறை நம்பிக்கை சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த போதனைகள் மூலம் ஒரு புதிய சமூகத்தைக் கட்டி வளர்க்கலாம் என்பது எந்தஅளவு சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
கே.கணேஷ்:இன்றைய நிலையில் நாம் விரக்தி அடைந்துதான் போயிருக்கிறோம். ஆனால், உலகம் முழுவதும் பார்த்தீர்கள் என்றால் பிறநாடுகளில் கூட துன்புறும் மக்களுக்கு உதவவேண்டும் என்ற இரக்க உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள் இதைக் காட்டுகின்றன. அவையும் ஸ்தாபனமயப்பட்டு, அவற்றிலும் பல கோளாறுகள் உள்ளனதான். இருப்பினும் அவற்றின் ஊடாகவும் நல்லவை நடக்கின்றன. மனிதன் என்பவன் தானே உணர்பவனாகவும் இருக்கிறான்.
எப்பொழுதும் நமக்குள் நன்மை, தீமையை உணரக் கூடிய ஒரு சக்தி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரிச்சுவடியில் இருந்துதான் நாம் இப்பொழுது ஆரம்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தச் இல் "பாலும் சமுதாயம் சமுதாயமாவது ஒரு நல்ல ஒழுக்கமான சமுதாயமாக வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
எம்.ஏ.நுஃமான்:மார்க்சிய சித்தாந்தத்துக்கு உலகளாவிய ரீதியில்ஒரு எதிர்காலம் இல்லை என்றா கருதுகிறீர்கள் ?
கே.கணேஷ்: மார்க்சிய தத்துவமே அடிப்படையில் தொழிலாளர்களை மையமாகக் கொண்டது தானே. அது தொழிலாளர்கள் - உழைப்பவர்கள் உயரவேண்டும் என்ற தத்துவம் - அந்தத் தத்துவத்தை யாருமே மறுக்க முடியாது. உழைப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் உயரவேண்டும் என்ற அந்த அடிப்படைத் தத்துவத்துக்கு வரும் போதுதான் நான் முன்னர் கூறியது போல மதத்தில் எப்படி ஒரு Common denominator வரவேண்டுமோ, அதேமாதிரி ஒரு இரக்கத்தன்மை, ஒரு மனிசத்தன்மை ஏற்பட வேண்டும் என்ற நிலைக்கு வருகிறோம். தனிப்பட்ட முறையில் மதத்தைக் குறை சொல்கிறார்கள். அப்படிப் பார்க்கப் போனால் எல்லாவற்றிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதை எல்லாம் மீறி அடிப்படைத் தத்துவத்தைத்தான் பார்க்க வேண்டும்.
அடிப்படைத் தத்துவமே நசுக்கப்பட்டவர்கள் அல்லது கீழ்நிலையில் உள்ளவர்கள் உயரவேண்டும் என்பது. உயர வேண்டுமானால் அவர்கள் ஒழுக்கத்தை விடக் கூடாது. அதைவிட்டுவிட்டால் அந்த சமூகம் உருவாக முடியாது.
எம்.ஏ.நுஃமான்:ஒழுக்கம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?
கே.கணேஷ்: ஒழுக்கம் என்று நான் சொல்வது என்னவென்றால் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய நேர்மை,சமூகத்துக்கு முரண் இல்லாத பண்புகள், அடிப்படைப் பண்புகள் என்று சொல்லுகிறோம் அல்லவா, எல்லா மதங்களும் அவற்றைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றில் உயர்ந்தவற்றை நாம்எடுத்துக் கொள்ளலாம்.
எம்.ஏ.நுஃமான்: உயரிய பண்புகளைத்தான் ஒழுக்கம் என்று சொல்லுகிறீர்கள்?
கே.கணேஷ்: ஆமா. ஆமா, நான் வரையறுத்துச் சொல்லக் கூடியது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இப்பொழுது மாமிசம் சாப்பிடுகிற ஒருவனைச் சைவனாக இருக்கச் சொல்லமுடியாது. சைவனாக இருப்பவனை மாமிசம் சாப்பிடச் சொல்ல முடியாது. அடிப்படையில் எது நன்மை எது தீமை என்று தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே குடிக்கக்கூடாது, கொலை செய்யக்கூடாது. இந்த அடிப்படைப் பண்புகளை மட்டும் கவனித்தாலே போதும் பஞ்சமாபாதகங்களைச் செய்யாமல் இருந்தால் அதுவே பெரிய விசயம்.
எம்.ஏ.நுஃமான்: இலங்கையின் இன்றைய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லக்கூடிய தீர்வுகள்என்ன?
கே.கணேஷ்: எல்லாவற்றுக்கும் பொறுமை சார்ந்த ஒரு நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வேன். ஒருவருக்கும் பொறுமை இல்லை. மொழி, மதம் எல்லாம் ஒரு வெறித் தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த வெறித் தன்மை இல்லாமல் நடுவு நிலையோடுதான் பார்க்கவேண்டும். அதற்கு உயர்ந்த பண்புகள் உருவாக வேண்டும். மேலோர்கள் அல்லது சான்றோர்கள் என்று சொல்கிறோமே, அந்தச் சான்றாண்மை ஏற்பட வேண்டும். அது இல்லாவிட்டால் என்ன தீர்வுதான் வந்தாலும் அது போய்க் கொண்டுதான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக